உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவாகிய தோட்டியானே பொறியாகிய யானையைந் தினையும் புலன்களிற் செல்லாமல் மீட்பவன்;
பரிதி: அறிவென்னுந் தோட்டியான் ஐம்புலன் என்னும் யானையைக் காப்பான்;
காலிங்கர்: ஒருவழிப்பட்ட சித்தத்தின் அறிவென்னும் அங்குசத்தினால் தமது நெறிக்கு மிகைபடுபொறிகளிற் பரவாமை, ஐவகைப்பட்ட மெய் வாய் கண் மூக்கு செவி யென்கிற ஐம்புலனையும் பாதுகாத்து அடக்கி ஒழுகுவான் யாவனொருவன்;
பரிமேலழகர்: திண்மை என்னும் தோட்டியால் பொறிகள் ஆகிய யானை ஐந்தினையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பான்;
பரிமேலழகர் குறிப்புரை: இஃது ஏகதேச உருவகம். திண்மை ஈண்டு அறிவின் மேற்று.
பழைய ஆசிரியர்கள் அனைவரும் அறிவு என்னும் தோட்டியால் ஐம்புலன்களையும் தத்தம் புலன்கள்மேல் செல்லாமல் காப்பவன் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை கண்டனர். பரிமேலழகர் உரன் என்பதற்குத் திண்மை என்று பொருள் கூறி சிறப்புரையில் 'திண்மை அறிவின் மேற்று' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுக்கோலால் ஐம்பொறிகளை அடக்கியவன்', 'வைராக்கியம் என்ற அங்குசத்தால் ஐந்து இந்திரியங்களான மதயானைகளை அடக்கியாண்டு', 'திண்மையென்னும் அங்குசத்தால் (அடக்குதற்கு அருமையில் ஒப்பற்ற) ஐம்பொறிகள் என்னும் யானனகளை அவற்றிற்குரிய புலன்வழிகளிற் செல்லாமல் தடுப்பதில் வல்லவன்', 'அறிவு என்னும் தோட்டியான் ஐம்பொறிகளாகிய யானைகளைத் தம் வழியில் தடுத்துக் காப்பவன் (தோட்டி-யானை ஓட்டும் கருவி)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மன உறுதி என்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கி ஆள்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேலாகிய விடத்தே யாதற்கு இவ்விடத்தேயிருப்பதொரு வித்து. [ஆதற்கு-உண்டாதற்கு; தோன்றுதற்கு]
மணக்குடவர் குறிப்புரை: பெருமை சொல்லுவார், முற்பட மக்கள் தன்மையனாய் இவ்வுலகின்கண் வாழ்பவன் அல்லன். தேவருள் ஒருவன் என்று கூறினார்.
பரிதி: மோட்சம் என்னும் பூமிக்கோர் வித்தாம் என்றவாறு.
காலிங்கர்: அவனே முத்தியென்கின்ற முடிந்த நிலத்திற்கு முதற்காரணமாவான் என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா நிலத்திலும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டு நிலத்திற்கு ஓர் வித்து ஆம்.
பரிமேலழகர் குறிப்புரை: அந்நிலத்திற்சென்று முளைத்தலின், 'வித்து' என்றார். ஈண்டுப் பிறந்து இறந்து வரும் மகனல்லன் என்பதாம்.
இப்பகுதிக்கு மணக்குடவர் மேலாகிய இடத்தில் தோன்றுதற்கு இவ்விடத்திலுள்ள வித்து என்றும் பரிதி மோட்சம் என்னும் பூமிக்கோர் வித்து என்றும் காலிங்கர் முத்தியென்ற முடிந்த நிலத்திற்கு முதற்காரணமாவன் என்றும் பரிமேலழகர் எல்லா நிலத்திலும் மிக்கதுமான வீட்டு நிலத்துக்கு ஓர் வித்து என்றும் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மேலான நிலத்துக்கு ஒரு வித்தாவான்', 'உலகத்துக்கு நன்மை உண்டாக்கக்கூடிய தெய்வீக சக்திக்கு இருப்பிடமாவர் அம்மகான்கள்', 'எல்லாவற்றினும் மேலான இடமெனப்படும் வீட்டினையடைந்து அதன்கண் நிலைத்து வாழ்வதற்குரியனாவன்', 'மேலான நிலையை அடைவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
மேலானஇடம் செல்ல ஒருவிதை ஆகிறான் என்பது இப்பகுதியின் பொருள்.
|