மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்;
பரிப்பெருமாள்: தம்மக்கள் தமதுடம்பினைச் சார்தல் தம்முடம்பிற் கின்பமாம்;
பரிதி ('தீண்டில்', 'சொற்கேட்கில்' என்பன பாடங்கள்): தன் புதல்வர் மெய்தீண்டில் உடற்கு இன்பம்;
காலிங்கர்: இனிய புதல்வர் வளர்ந்தும் தளர்நடையிட்டும் வந்து ஏறி, மற்று அவர் மெய்யினைத் தீண்ட, அதுவே இல்வாழ்வோர்க்கு உடற்கின்பமாவது.
பரிமேலழகர்: ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;
மணக்குடவரும் காலிங்கரும் 'தமது குழந்தை தமது உடம்பினைத் தீண்டல் இன்பமாம்' என்றனர். பரிமேலழகர் 'பெற்றோர் தமது மக்களைத் தீண்டுதல்
மெய்க்கு இன்பம் என்றுரைத்தார். பரிதி இரண்டிற்கும் பொதுவாக 'மெய்தீண்டில் உடற்கு இன்பம்' என்று எழுதினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குழந்தை மேனிபடுவது உடலுக்கு இன்பம்', 'குழந்தைகள் பெற்றோரது உடம்பைத் தொடுதல் அவர் உடலுக்கு இன்பம் தருவதாகும்',
'தம் குழந்தைகள் உட்லைத் தீண்டுதல் (தழுவும்போது) உடலுக்கு இன்பம் தரும்', 'தாம் பெற்ற குழந்தைகளின் உடல் தம் உடலைத் தீண்டுவது
உடலுக்கும் இன்பமளிக்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.
தமது மக்கள் தம் உடம்பைச் சார்தல் உடலுக்கு இன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
பரிப்பெருமாள்: அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கின்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுவரை இருகுறள்களால் ஊறும் ஓசையும் இனிதாம் என்றார். ஒளியும் நாற்றமும் கூறாராயினர் செயற்கையானும் விளைதலின். [ஊறு-உறுதலால் (மெய்யினைத் தீண்டலால்); நாற்றம்-மணம்]
பரிதி: அவர் வார்த்தை கேட்கில் ஐம்புலத்துள் ஒன்றான செவிக்கு இன்பம் என்றவாறு.
காலிங்கர்: பின்பு அறிவுடையராயின விடத்து எழுத்தோடு புணர்ந்த சொல் பிறந்ததாயின் மற்றவர் எழுத்தோடு புணர்ந்த சொற்கேட்டல் முன்பினும் தமது செவிக்கு இனிய இன்பமாம் என்றவாறு.
பரிமேலழகர்: செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின்,
பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.
'அவர் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மழலைச் சொல் கேட்பது காதுக்கு இன்பம்', 'அவர்களது குதலைச் சொல்லைக் கேட்டல் அவர் செவிக்கு இன்பம் பயக்கும்', 'அவர்கள் மழலைச் சொல்லைக் கேட்டல் செவிக்கு இன்பம் தரும்', 'தாம் பெற்ற குழந்தைகளின் பேச்சைக் கேட்பது காதுக்கு இன்பமளிக்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
பின்னும் அவர் சொல்லைக் கேட்பது காதுக்கு இன்பமாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|