உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை,
பரிதி: செல்வத்துள் இல்லின் தன்மையாவது விருந்து ஓம்பல். அங்ஙனம் ஓம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு.
பரிமேலழகர்: உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;
பரிமேலழகர் குறிப்புரை: உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.
'உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் உடைமையின் கண்ணே இல்லாமைபோல என்று உவமையாகக் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்', 'செல்வக்காலத்து வறுமையாவது விருந்தோம்புதலைச் செய்யாத பேதைமை', 'பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள்தாம்', 'செல்வம் உள்ள காலத்தும் வறுமை உள்ளவராகுதல் விருந்தினரை ஓம்பாத அறியமையால் உண்டாகும்', என்ற பொருளில் உரை தந்தனர்.
செல்வநிலையில் இல்லாமையாய்த் தோன்றுவது விருந்தோம்பலை இகழும் பேதைமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.
மடவார்கண் உண்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதைமையார் மாட்டேயுளதாம்.
பரிதி: ஸ்தீரியும் புருஷனும் ஒரு மனமாகச் செய்வது விருந்து. அல்லது பிரயோசனம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.
'பேதைமையார் மாட்டேயுளதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும்', 'அது அறிவிலிகளிடையே காணப்பெறும்', 'அவர்களுக்கு முட்டாள்தனந்தான் மிச்சம்', 'அறியாதாரிடம் இந்நிலைமை யுண்டாகும். அறிந்தவரிடம் இராது' என்றபடி பொருள் உரைத்தனர்.
அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|