எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்;
பரிப்பெருமாள்: எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தேயாயினும் உய்வுண்டாம்;
பரிதியார்: எந்த நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டு;
காலிங்கர்: அருள், அறம், வாய்மை முதலாகிய எல்லா நன்மைகளையும் கொன்ற பாவிக்குங் கொடுநரகத்திலின்று யாதானும் ஒரு காரணத்தினால் உய்வுண்டாம்;
பரிமேலழகர்: பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;
பரிமேலழகர் குறிப்புரை: பெரிய அறங்களைச் சிதைத்தலாவது, ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்த்தப்புதலும் (புறநா.34) முதலிய பாதகங்களைச் செய்தல். [ஆன்முலையறுத்தல்-பசுவின் அடியை அறுத்தல்; கருவினைச் சிதைத்தல்-கருப்பத்தைக் கலைத்தல்; குரவர்த்தப்புதல்-பெரியோர்க்குத் தவறிழைத்தல்; பாதகங்கள் - தீச்செயல்கள் (பாவங்கள்)]
'எந்த நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அருள், அறம், வாய்மை முதலா நன்மைகளைக் கொன்றவரைச் சொல்கிறார்; பரிமேலழகர் 'ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், குரவர்த்தப்புதலும் ஆகிய பெரிய அறங்களைச் சிதைத்தார்' என்று கூறி. உய்வு என்ற சொல்லுக்கு பாவத்தின் நீங்கும் வாயில் எனப் பிராயச்சித்தம்' என்ற பொருளும் கூறுகிறார். இவர் கூறும் ‘பார்ப்பார்த் தப்புதலும்’ என்பதற்குக் ‘குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்’ என்ற பாடமும் உண்டு.
இன்றைய ஆசிரியர்கள் 'எந்த நலத்தை அழித்தாலும் பிழைக்கலாம்', 'எவ்வளவு பெரிய அறங்களைச் சிதைத்தவர்க்கும் தப்பிக்க வழியுண்டு', 'எவ்வகைப்பட்ட பெரிய நன்மையைச் சிதைத்தவர்க்கும் கடைத்தேறும் வழியுண்டு', 'பெரிய அறங்களை அழித்தவர்க்கும் பிழைக்கும் வழி உண்டு' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எவ்வகைப்பட்ட நன்மையையும் சிதைத்தவர்க்கு மீட்சி கிடைக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை
பரிப்பெருமாள்: ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை
பரிப்பெருமாள் குறிப்புரை: பெண்டிர்க்கும் இது வேண்டுமாயினும் தலைமைபற்றி மகன் என்றார்.
பரிதியார்: செய்ந்நன்றி கொன்றாற்கு எந்தக் காலத்தினும் பிழைப்பில்லை என்றவாறு.
காலிங்கர்: மற்றும் தனக்கு ஒருவர் செய்த செய்ந்நன்றியைக் கொன்ற மகனாகிய கொடும்பாவிக்குக் கொடிய நரகத்தினின்றும் ஒரு காலத்தும் உய்வில்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.
'செய்ந்நன்றி கொன்றாற்கு எந்தக் காலத்தினும் உய்வில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நன்றி கெட்டால் பிழைப்பில்லை', 'ஆனால் ஒருவர் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்குத் தப்பிக்க வழியே இல்லை', 'தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு அப்பாவத்தினின்றும் கரையேறும் வழியில்லை', 'ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்தவனுக்குக் கடைத்தேறும் வழி இல்லை' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
செய்தஉதவிக்கான நன்றியுணர்வைக் கொன்றவனுக்கு மீள வழியில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|