ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்;
பரிதி: ஒழுக்கத்தின் மேன்மையினாலே பெருமை எய்துவர்;
காலிங்கர்: தமக்கு அடுத்த ஆசாரத்தினாலே எய்துவர் பெருமையை;
பரிமேலழகர்: எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்;
'ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'விடா ஒழுக்கத்தால் முன்னேற்றம் வரும்', 'ஒழுக்க நெறியால் மக்கள் மேன்மை பெறுவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தாலே மேம்பாட்டை அடைவர்', 'எல்லாரும் ஒழுக்கத்தால் மேம்பாட்டினை அடைவர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒழுக்கத்தால் மேன்மை பெறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.
இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர். [அடாத பழி - தாங்க இயலாத பழிச்சொல்]
பரிதி: ஒழுக்கம் கெட்டால் அபகீர்த்தியாம், ஆதலால் ஒழுக்கம் கைவிடுவான அல்லன் என்றவாறு. [அபகீர்த்தி -இகழ்ச்சி]
காலிங்கர்: மற்று அதனின் இழுக்கத்தினால் எய்துவர் அளவிறந்த பழியினை என்றவாறு.
பரிமேலழகர்: அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
பரிமேலழகர் குறிப்புரை: பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன. [அடாப்பழி - பொருந்தாதபழி; அடுக்கும் - தகும்]
'ஒழுக்கத்தின் இழுக்கத்தினால் எய்துவதற்கு அளவிறந்த/உரித்தல்லாத பழியினை எய்துவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'விடுவதால் பொருந்தாப் பழி வரும்', 'ஒழுக்கக் கேட்டினால் பெறுதற்குரியதல்லாத பழியையும் பெறுவர்', 'அதனின் வழுவுதாலே, அடையக் கூடாத அடாப் பழியை யடைதல் கூடும். (இல்லாத குற்றத்தையும் உள்ளதாய்ப் பகைவர் தூற்றுவதாலென்க.)', 'அவ்வொழுக்கதிலிருந்து தவறுதலால் அடையக்கூடாத பெரும் பழியை அடைவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஒழுக்கத் தவறுதலால் பெறுதற்குரியதல்லாத பழியை அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|