பொறுத்தல் இறப்பினை என்றும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; [மிகையினை - குற்றத்தை]
பரிப்பெருமாள்: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று;
பரிதி: பிறர் செய்த குற்றம் பொறுத்தலின் புகழில்லை;
காலிங்கர்: தம்மாட்டுச் சிலர் மரபினைக் கடந்த நெறியதாகிய கேட்டைச் செய்யினும், வெஞ்சொற்களைச் சொல்லினும் தாம் அதனை எஞ்ஞான்றும் பொறுத்தல் சாலநன்று; [வெஞ்சொற்கள் - கொடிய சொற்கள்]
காலிங்கர் பதவுரை: இறத்தல் என்றது கடத்தல்.
பரிமேலழகர்: பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க;
'பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறரது பெருங்குற்றத்தை என்றும் பொறுக்க', 'பொறுத்தல் என்பது ஒருவன் செய்துவிட்ட குற்றத்தைப் பொறுத்துக் கொள்வது', 'ஒருவன் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக', 'பிறர் செய்த தீமையை எப்பொழுதும் பொறுத்துக் கொள்க', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிறர் செய்த மிகையினை எப்போதும் பொறுத்துக் கொள்ளுக என்பது இப்பகுதியின் பொருள்.
அதனை மறத்தல் அதனின்று நன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
பரிப்பெருமாள்: அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
மறத்தல்-வெகுளாமை. அது மிகுதி உடைத்தாதலின் அதனைத் துறவறத்துக் கூறுவர்.
பரிதி: அதனினும் பிறர் செய்த குற்றம் மறத்தலைப் போல அறம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று இதனை யாம் பொறுத்தேம் என்று கருதாது அப்பொறுத்தமை தன்னையும் மறத்தல் சாலநன்மை உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார். [மேற்சொல்லிய இரண்டனையும் - தீமையானவற்றைச் செய்தலும், அவற்றைச் சொல்லுதலும்]
'அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முடியுமாயின் மறக்க; அது மிகவும் நல்லது', 'பொறுத்து மன்னித்து விடுவதை விட அக்குற்றத்தை மறந்துவிடுவது இன்னும் சிறந்த பொறையுடைமையாகும்', 'அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவுஞ் சிறந்தது', 'அத்தீமையை உடனே மறந்துவிடல் அங்ஙனம் பொறுத்தலினும் நன்மையாகும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அக்குற்றத்தை மறந்து விடுதல் பொறுத்தலினும் மிகவும் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|