துறந்தாரின் தூய்மை உடையார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறந்தவர்களைப் போலத் தூய்மை யுடையார். [துறந்தவர் - பற்றற்றவர்]
மணக்குடவர் குறிப்புரை: இது பற்றறத் துறந்தவரோ டொப்பரென்றது. [பற்றத்துறந்தவரோடு- நான் என்னும் அகப்பற்றும் எனதென்னும் புறப்பற்றும் நீங்க உள்ளத்துறவு பூண்டாரோடு]
பரிதி: இவன் இல்லறத்திலே இருந்தும் தனக்கு ஒருவர் செய்த குற்றம் பொறுப்பவன் ஆதலின் பெரியவன் என்றவாறு.
காலிங்கர்: உலகத்து வாழ்வார் யாவரினும் மனம்வாக்குக் காயம் என்னும் மூன்றினாலும் தூய்மையுடையராய் மனைவாழ்க்கைப் பெருந்துயரைத் துறந்தவரன்றே; மற்று அவரினும் தூய்மையுடையர் யாவரோ எனில்;
பரிமேலழகர்: இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார் போலத் தூய்மையுடையார்;
பரிமேலழகர் குறிப்புரை: தூய்மை : மனம் மாசு இன்மை.
'துறந்தவர்களைப் போல/துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தூய்மை என்றதற்கு 'மனம் மாசு இன்மை' என்று பரிமேலழகர் பதவுரை தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'துறந்தவரினும் தூயவர்', 'துறவிகளைக் காட்டிலும் சுத்தமான சகிப்புள்ளவர்கள்', 'துறவிகளைப் போலப் புனிதம் உடையவரே', 'துறந்தாரைவிடத் தூய்மையுடையவர் ஆவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
துறந்தவர்களைவிடத் தூய்மையுடையர் என்பது இப்பகுதியின் பொருள்.
இறந்தார்வாய் இன்னாச்சொல் நோக்கிற் பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகையாய்ச் சொல்லுவாரது தீச்சொல்லைப் பொறுக்குமவர்.
பரிதி: துறந்தார் பெரியோரானாலும், தவத்தின் பெருமையினாலே ஒருவரைச் சாபமிடுவர். [சாபம்- சினந்து கூறும் கேடுபயக்கும் மொழி]
காலிங்கர்: பிறர் வாயில் வெஞ்சொற்களைப் பொறுக்கிற்பவர். [பொறுக்கிற்பவர்- தாங்கிக் கொள்ளும் வன்மையுடையவர்கள்]
பரிமேலழகர்: நெறியைக் கடந்தார் வாய் இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்.
பரிமேலழகர் குறிப்புரை: 'வாய்' என வேண்டாது கூறினார், 'தீய சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் இழிவு முடித்தற்கு.
'மிகையாய்ச் சொல்லப்பட்ட தீச்சொல்லை/வெஞ்சொற்களை/ நெறிகடந்தார் கூறும் இன்னாசொல்லைப் பொறுப்பவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தரங்கெட்டவரின் வசவைப் பொறுப்பவர்', 'கோபத்தால் ஒருவன் முறை தவறிப் பேசுகின்ற துன்பந்தரும் வசைகளையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ளுகிறவர்கள்', 'நெறிகடந்தவர் வாயில் பிறக்குங் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளும் இல்வாழ்க்கையர்', 'அறநெறியைக் கடந்தவர் கூறுகின்ற இன்னாச் சொல்லைப் பொறுப்பவர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நெறிகடந்தவர் வாயில் பிறக்கும் வெஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்ளுகிறவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.
|