இறல்ஈனும் எண்ணாது வெஃகின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விசாரியாதே பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிர்க்குக் கேடு தருமென்றது.
பரிதி: கேடாகிய விதனத்தைக் கொடுக்கும், பிறர் வாழ்வை ஆசைப்படுவானாகில்; [விதனம் - துன்பம்]
காலிங்கர்: எஞ்ஞான்றும் கேட்டினைத்தரும் இன்னாதனவற்றை விரும்புவானாயின்;
பரிமேலழகர்: பின் விளைவது அறியாது ஒருவன் பிறன் பொருளை வெளவக் கருதின், அக்கருத்து அவனுக்கு இறுதியைப் பயக்கும்; [வௌவ - கவர]
விசாரியாதே/பின் விளைவது அறியாது பிறர் பொருளை விரும்புவானாயின் அது கேட்டைத் தரும்/இறுதியைப் பயக்கும் என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'இன்னாதனவற்றை விரும்புவானாயின்' என்று உரைத்ததால் அவர் எண்ணாது வெஃகின் என்பதற்கு 'இன்னாத வெஃகின்' எனப் பாடம் கொண்டிருப்பார் என்பர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பின்வருவது பாராமல் விரும்புவது அழிவு', 'பின் விளைவு அறியாது பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு இறுதியைத் தரும்', 'அதனாலுண்டாகும் நன்மை தீமைகளை எண்ணிப் பார்க்காமல் பிறருடைய பொருளைக் கவர ஆசை கொண்டால் கெடுதி உண்டாகும்', 'பின் விளைவதை நினையாமல் பிறர் பொருளை விரும்பினால்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பின்வருவது அறியாமல் பிறர் பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவ்விருப்பம் அவனுக்கு அழிவைப் பயக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்.
பரிதி: அஃதன்றியிலே, போன சென்மாந்திரத்திலே விட்டதற்குத் தக்கதாகக் கூடுமென்று எண்ணுவானாகில், திருமாது வெற்றியைத் தரும் என்றவாறு. [சென்மாந்திரம்-மறுபிறப்பு; திருமாது - திருமகள்]
காலிங்கர்: இனி அஃதன்றித் தனக்கு எல்லாவென்றியையும் தரும் பிறர்பொருளை விரும்பாமையாகிய மனமகிழ்ச்சி என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொருளை வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பகையும் பாவமும் பெருக்கலின் 'இறல்ஈனும்' என்றும், அப்பொருளை வேண்டி உழல்வோர் யாவரையும் கீழ்ப் படுத்தலின், 'விறல்ஈனும்' என்றும் கூறினார். 'செருக்கு' ஆகு பெயர். இதனான் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன. [அவ்விருமையும்-வெஃகுதலின் குற்றமும் வெஃகாமையின் குணமும்]
'வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத்தைத்தரும்' என்று மணக்குடவரும் 'முன்பிறவியில் விட்டதற்குத் தக்கதாகக் கூடுமென்று எண்ணுவானாகில் வெற்றியைத் தரும்' என்று பரிதியும் 'விரும்பாமையாகிய மனமகிழ்ச்சி எல்லாவென்றியையும் தரும்' என்று காலிங்கரும் 'வேண்டாமை என்னும் செல்வம் வெற்றியைப் பயக்கும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டாம் என்னும் பெருமிதம் வெற்றி', 'பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும்', 'அப்படி வரும் செல்வம் வேண்டாவென்று விலக்கிவிடும் பெருமை தர்ம பலத்தைக் கொடுக்கும்', 'அஃது அழிவைத் தரும். விரும்பாமையாகிய வீரம் நல்ல வெற்றியைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறர் பொருளை விரும்பாமை என்னும் பெருமிதம் வெற்றியைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|