அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும்;
பரிதி: புண்ணியத்தின் வழியைப் பேசான்; பாவமே செய்வானாகிலும்;
காலிங்கர்: தன் நாவினால் ஒருவன் அறத்தினைச் சொல்லானுமாய், பாவமாகிய அல்லாதனவற்றைச் செய்வானாகிலும்;
பரிமேலழகர்: ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்;
'ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவமே செய்வானாகிலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் அறத்தைப் பழித்துத் தீமை செய்யினும்', 'ஒருவன் அறம் என்பதையே அறியாதவனாக அறம் அல்லாத காரியங்களைச் செய்கிறவனாக இருந்தாலும்', 'ஒருவன் தருமம் என்னுஞ் சொல்லைக் கூடச் சொல்லாது தீயன செய்து ஒழுகினும்', 'ஒருவன் அறநெறிகளைக் கூறாமல் தீயனவற்றைச் செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவன் அறம் பற்றி அறியாதவனாக, தீயனவற்றைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
புறம்கூறான் என்றல் இனிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
பரிதி: ஒருவன் குற்றத்தைப் புறம் சொல்லாதிருப்பவன் ஈடேறுவான். [ஈடேறுவான் - உயர்வான்].
காலிங்கர்: புறங்கூறான் என்று பிறர் சொல்லுமாறு இருத்தல் பெரிதும் இனிது என்றவாறு.
பரிமேலழகர்: பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.
'பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கோள் சொல்லான் என்பது காதுக்கு இனிது', 'அவன் கோள் சொல்ல மாட்டான் என்பது சிறப்புடையது', 'அவன் புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லதே. (அது பிறர்க்கு மகிழ்ச்சி விளைப்பது என்பது கருத்து)', 'காணாதவிடத்துப் பழித்து உரையான் என்று சொல்லப்படுதல் இன்பம் பயக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
புறங்கூற மாட்டான் என்ற பெயர் பெறுதல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|