பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளில்லாத சொல்லை மறந்துஞ் சொல்லார்;
பரிதி: விளையாட்டிலும் பயனில்லாத வார்த்தை சொல்லார்;
காலிங்கர்: இகழ்ச்சியுற்ற விடத்தும் பயனில சொற்களைச் சொல்லார்;
பரிமேலழகர்: பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்;
'பயனில சொற்களைச் சொல்லார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பொச்சாந்தும் என்றதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் 'மறந்தும்' என்றும் பரிதி 'விளையாட்டிலும்' என்றும் காலிங்கர் 'இகழ்ச்சியுற்ற விடத்தும்' என்றும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மறந்தும் பொருளற்ற சொற்களைச் சொல்லார்', 'மறந்தாற்போல்கூட வீண் வார்த்தைகளைப் பேசிவிடமாட்டார்கள்', 'மறந்தும் பொருள் இல்லாத சொற்களைச் சொல்லமாட்டார்', 'பயனற்ற சொற்களை மறந்தும் சொல்லார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருளல்லவற்றை மறந்தும் சொல்லமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.
மருள்தீரந்த மாசறு காட்சி யவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிவுடையார் கூறாரென்றது.
பரிதி: தெளிந்த மனத்தினர் என்றவாறு.
காலிங்கர்: தாம் ஒரு பொருளை அறிந்தவர் மற்றதனை நிலைமையிற் காண்கின்ற குற்றமற்ற அறிவினையுடையார். [நிலைமையிற் காண்கின்ற -தகுதியான் அறிகின்ற]
பரிமேலழகர்: மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினையுடையார். [தூய அறிவு - மெய்யறிவு]
பரிமேலழகர் குறிப்புரை: 'தூய அறிவு' மெய்யறிவு. 'மருள் தீர்ந்த' என்னும் பெயரெச்சம் காட்சியவர் என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும் பயன்இல சொல்லாமையின் குணம் கூறப்பட்டது. [மருள் - மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்றறியும் மாறுபாடான அறிவு]
'மயக்கந் தீர்ந்த குற்றமற்ற தெளிவினை யுடையார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மயக்கம் இல்லாத நல்லறிஞர்', 'மயக்கம் நீங்கிக் குற்றமற்ற அறிவுடையவர்கள்', 'மயக்கம் இல்லாத குற்றமற்ற அறிவினையுடையவர்', 'மயக்கம் நீங்கிய குற்றம் அற்ற அறிவினையுடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மயக்கம் நீங்கிய குற்றமற்ற தெளிவினையுடையவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|