ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்;
பரிதி: ஆற்றுவார் பசி ஆற்றலே பெரிது;
காலிங்கர்: தவம் மானம் முதலாகிய அனைத்துக் காரணங்களையும் தாம் இயற்றுகிற அறநெறிக்கு வழுவுதல் உண்டாகாமே அவற்றின் மதங்களை ஆற்றி ஒழுகுவாருடைய ஆற்றலின் மிக்க தவமாவது யாதோ எனில்; [மதங்களை-கொள்கைகளை]
பரிமேலழகர்: தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்;
'தவத்தான் வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பசி பொறுத்தல் பேராற்றல்', 'தவவலிமையுடையார்க்கு வலிமையாவது தம்பசி பொறுத்தல்', 'தவம் செய்கிறவர்களின் சிறப்பு பசியைப் பொறுத்துக் கொள்ளும் திறமையில் அடங்கியது', 'தவம் வல்லவருக்கு வலிமையாவது பசிதாங்குதல்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பசி பொறுத்தல் ஆற்றலுடையவர் வலிமையில் பெரிது என்பது இப்பகுதியின் பொருள்.
அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுவும் பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.
பரிதி: அவன் சருகு பொசித்து தவசு பண்ணுவாரிலும் பெரியனாம்; எப்படி என்றால் சருகு பொசிப்பார் ஒருவரையும் பசியாற்றமாட்டார்; தன் ஆத்துமாவையும் ஒறுப்பர்; ஆகையால் இவனுக்கு அவர்கள் சரியல்லர் என்றவாறு. [பொசித்து-உண்டு; ஒறுப்பர்-வருத்துவர்]
காலிங்கர்: பசியை ஆற்றலாகின்ற பெருந்தவமானது வறியவர் வந்தால் அப்பசிப்பிணிக்கு மருந்தாகிய அமுதம்கொடுத்து மற்றதனை ஒழிப்பாரது புண்ணியத்திற்குப்பின் என்றவாறு.
பரிமேலழகர்: அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். [வலி - வலிமை (ஆற்றல்)]
பரிமேலழகர் குறிப்புரை: தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று என்பதாம்.
'அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதனினும் பேராற்றல் பிறர் பசியை ஆற்றுவது', 'அவர் வலியும் தாங்க முடியாத பசியை ஈகையால் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான். (தவத்திலும் தானம் சிறந்தது)', 'அதுவும் கூட பிறர் பசியைத் தீர்த்து வைப்பவர்களின் திறமைக்குப் பிற்பட்டதுதான்', 'அவ் வலிமையும் அப்பசியைத் தமது ஈகையான் மாற்றுவாரது திறமைக்குப் பிற்பட்டதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவர் ஆற்றலும் பிறர் பசியைப் போக்குவாரது வலிமைக்கு அடுத்தபடிதான் என்பது இப்பகுதியின் பொருள்.
|