வசையொழிய வாழ்வாரே வாழ்வார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வசையொழிய வாழுமவர்களே உயிர் வாழ்வாராவர்;
பரிதி: வசையில்லாமல் வாழ்கின்றது வாழ்வுக்கு லட்சணம்;
காலிங்கர்: ஏற்பவர்க்கு ஈயாப் பெரும்பாவியர் இவர் என்று சொல்லும் வழுவுரை தமக்கு இலதாக வாழ்வாரே ஈண்டு உயிர் வாழ்வார் என்று யாவராலும் சொல்லப்படுவர்;[வழுவுரை -பழிச்சொல்]
பரிமேலழகர்: தம்மாட்டு வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்.
'வசை உண்டாகாமல் வாழ்வாரே உயிர் வாழ்வாராவார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வசையின்றி வாழ்பவரே வாழ்பவர்', 'தம்மிடம் பழிவாராமல் புகழ்பட வாழ்வாரே உயிர் வாழ்பவராவார்', 'புகழ் தேடாத குற்றம் ஒழியும்படி முயற்சி செய்கிறவர்களே வாழ்க்கை அறிந்தவர்கள்', 'தம்மிடத்து வசையுண்டாகாமல் வாழ்கின்றவர்களே உயிர்வாழ்பவர்களாவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தம்மைப் பிறர் இகழாமல் வாழக்கூடியவரே வாழ்பவர் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.
இசைஒழிய வாழ்வாரே வாழா தவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழொழிய வாழ்வாரே உயிர் வாழாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது புகழில்லார் பிணத்தோ டொப்ப ரென்றது.
பரிதி: அதிலும் பெரியது என்றவாறு. [வித்தை - கல்வி]
காலிங்கர்: ஆதலால் யாவர்க்கும் உபகரிக்கும் பெரும்புகழாளர் இவர் என்று யாவரும் சொல்லும் புகழ்ந்துரை தமக்கு இலாதாமாறு வாழ்வாரே ஈண்டு உயிர்வாழாத நடைப்பிணம் என்றவாறு.
பரிமேலழகர்: புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்.
பரிமேலழகர் குறிப்புரை: வசையொழிதலாவது இசை என்னும் எச்சம் பெறுதல் ஆயினமையின், இசையொழிதலாவது வசை பெறுதலாயிற்று. மேல், 'இசை இலா யாக்கை' என்றதனை விளக்கியவாறு. இதனான் இவ்விரண்டும் உடன் கூறப்பட்டன. மறுமைப்பயன் 'வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' (குறள்50) என மேலே கூறப்பட்டது. படவே இல்லறத்திற்கு இவ்வுலகில் புகழும், தேவர் உலகில் போகமும் பயன் என்பது பெற்றாம். இனி, மனு முதலிய அற நூல்களால் பொதுவாகக் கூறப்பட்ட இல்லறங்கள் எல்லாம் இவர் தொகுத்துக் கூறிய இவற்றுள்ளே அடங்கும்: அஃது அறிந்து அடக்கிக் கொள்க: யாம் உரைப்பின் பெருகும். ['இசையென்னும் எச்சம்' - இவ்வதிகாரத்தின் 8ஆம் குறள் காண்க; இவ்விரண்டும் - வசையொழிய வாழ்வார் உயர்வும் இசையொழிய வாழ்வார் இழிவும்]
'புகழ் உண்டாகாமல் வாழ்வாரே இறந்தார் ஆவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இசையின்றி இருப்பவரே இறந்தவர்', 'புகழ்கெட வசையுண்டாக வாழ்வாரே இறந்தவராவார்', 'உள்ள புகழ் ஒழியும்படி அபகீர்த்தி வரக்கூடிய காரியங்களைச் செய்கிறவர்களே வாழ்த் தெரியாதவர்கள்', 'புகழ் உண்டாகாமல் வாழ்பவரே இறந்தவராவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
புகழ் பெறாமல் உயிர் வாழ்கின்றவர்கள் வாழாதவர் ஆவர் என்பது இப்பகுதியின் பொருள்.
|