அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
(அதிகாரம்:அருளுடைமை
குறள் எண்:243)
பொழிப்பு (மு வரதராசன்): அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
|
மணக்குடவர் உரை:
அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதலில்லை.
இது நரகம் புகாரென்றது.
பரிமேலழகர் உரை:
இருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் - இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை - அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
('இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.)
சி இலக்குவனார் உரை:
இருளடைந்த துன்ப உலகத்தின்கண் புகுதல் அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல் அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை.
பதவுரை: அருள்-அருள்; சேர்ந்த-அடைந்த; நெஞ்சினார்க்கு-நெஞ்சினை உடையார்க்கு; இல்லை-இல்லை; இருள்-இருள்; சேர்ந்த-செறிந்த; இன்னா-தீய; உலகம்-உலகம்; புகல்-புகுதல்.
|
அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை;
பரிப்பெருமாள்: அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை;
பரிதி: சர்வரிடத்திலும் கிருபை ஆள்பவர்க்கு தெய்வலோகம் சித்திக்கும் என்றவாறு; [சர்வரிடத்திலும் - எல்லாரிடத்திலும்; சித்திக்கும்-கிட்டும்]
காலிங்கர்: அனைத்துயிர்மாட்டும் ஒத்த அருளானது பொருந்திய நெஞ்சினையுடையார்க்கு எஞ்ஞான்றும் இல்லை;
பரிமேலழகர்: அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை;
'அருளைப் பொருந்தின நெஞ்சினையுடைவர்க்கு இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அருள் நெஞ்சம் கொண்டவர் அடைய மாட்டார்', 'அருள் பொருந்திய மனமுடையார்க்கு இல்லை', 'அருள் நெறியை மேற்கொண்ட மனமுள்ள துறவிகளுக்கு இல்லை', 'அருள் நிறைந்த மனமுடையவர்களுக்கு இல்லையாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல்.
மணக்குடவர் குறிப்புரை: இது நரகம் புகாரென்றது.
பரிப்பெருமாள்: இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நரகம் புகாரென்றது.
பரிதி: நரகலோகம் இல்லை.
காலிங்கர்: யாதோ எனில் உண்மை உணராமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்களைச் சென்றடைதல் என்றவாறு. [இன்னாங்கு - துன்பம்]
பரிமேலழகர்: இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்,
பரிமேலழகர் குறிப்புரை: 'இருள் செறிந்த துன்ப உலகம்' என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், 'உலகம்' எனப்பட்டது.
'இருளைப் பொருந்தின நரகலோகம் புகுதல் என்ற பொருளில்' மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அறியாமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்களைச் சென்றடைதல்' என்று காலிங்கரும் 'இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல்' எனப் பரிமேலழகரும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறியாமையும் துன்பமும் உடைய உலகத்தை', 'அறியாமையுடைய துன்ப உலகிற் சேர்தல்', 'அறியாமை சேர்ந்த துன்பங்கள் உள்ள உலகியல்களில் ஈடுபட வேண்டிய வேலை', 'இருள் நிறைந்த துன்ப உலகத்தில் புகுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் இல்லை என்பது பாடலின் பொருள்.
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது எது?
|
அருளுடையார் வன்முறையாளர் கூட்டத்தில் இணையமாட்டார்.
அருள் உள்ளம் உடையவர்கள் இருள் சூழ்ந்த கொடியவர் உலகத்திலிருந்து விலகியே இருப்பர்.
அருள்நெறி பேணுபவர்கள் 'அருள் சேர்ந்த நெஞ்சினர்' என்று இங்கு குறிக்கப்படுகின்றனர். அருள்சேர்ந்த நெஞ்சினர் அதாவது அனைத்து உயிர்மாட்டும் ஒத்த அருள் காட்டும் உள்ளம் கொண்டோர்க்கு பெருந்துன்பங்களில் உழலும் நிலை வராது என்கிறது பாடல்.
அருள் உணர்வுடன் கூடியவர் உலகில் பொய், கொலை, களவு, முதலான தீய ஆற்றல்களுக்கு இடமில்லை. அவர்கள் அருள் என்னும் ஒளி நிறைந்த நெஞ்சினர் ஆதலால் துன்பங்கட்குக் காரணமான எல்லாக் கொடுஞ்செயல்களும் உள்ளத்திலிருந்து நீக்கப்பட்டு இன்ப நிலையை கிட்டியவராயிருப்பர். அறியாமை என்னும் இருள்தான் துன்பம் தருவது; ஒளியையே நெஞ்சில் அடக்கியவர்களுக்கு அத்துன்பம் இல்லை.
இன்னா உலகம் புகல் இல்லை என்று சொல்லப்பட்டதால், அருள் நெஞ்சமுடைய அவர்கள் எந்தக் காலத்திலும் யாருக்கும் இன்னாதவற்றைச் செய்ய மாட்டார்கள்; அருளிற்கு நேர் எதிரான வன்முறைச் செயல்களில் மனங்கொளார் ஆதலால் அவர்கள் இருள் நிறைந்த கொடியவர் உலகத்தில் தங்களை எந்த வகையிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
|
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது எது?
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்றதற்கு இருளைப் பொருந்தின நரகலோகம், நரகலோகம், உண்மை உணராமை காரணமாக வந்து சேர்ந்த இன்னாங்குடைய உலகங்கள், இருள் செறிந்த துன்ப உலகம், அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகம், இருள் மிகுந்த துன்பவுலகம், அறியாமையும் துன்பமும் உடைய உலகம், அறியாமையுடைய துன்ப உலகம், அறியாமை சேர்ந்த துன்பங்கள் உள்ள உலகியல்களில் ஈடுபடல், இருள் அமைந்த கொடிய உலகியல், இருள் நிறைந்த துன்ப உலகம், இருளடைந்த துன்ப உலகம், மயக்கத்தைத் தரக்கூடிய துன்பம் நிறைந்த உலக வாழ்க்கை, இருள் திணிந்த துன்பவுலகம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
அருள் இல்லாத உலகம் போரும் பூசலுமாகத் துன்பம் நிறைந்து இருக்கும். இருள் சேர்ந்த உலகம் என்பது கொடியவர் கூட்டுறவைக் குறிக்கிறது எனவும் கொள்ளமுடியும். இங்கு இன்னா உலகம் என்பது துன்ப உலகத்தைக் குறிக்கும் என்பதைவிட இன்னாங்கு அதாவது தீமை நிறைந்த வன்முறையாளர் உலகத்தைச் சுட்டுகிறது எனக் கொள்வது பொருத்தமாகலாம். அருள் நிறைந்த உள்ளம் உடையவர்கள் இந்த இருட்டு உலகத்திலே புகுந்து சீரழிய மாட்டர்கள்.
எதையும் பற்றி எண்ணாமல் துன்பங்கள் நிறைந்த உலகியல் செயல்களில் ஈடுபடுவதால் அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகம் என்றும் இதை விளக்குவர்,
நெஞ்சில் ஈரமின்றி, பழிக்கு அஞ்சாமல், தீச்செயல்களில் ஈடுபடுவதால், செறிந்த இருளை உடையதாய்த் தன்னிடம் வந்து அடைந்தவர்களைத் துன்பங்கள் மட்டுமே செய்யத் தூண்டுவது இருள்சேர்ந்த இன்னா உலகம்.
இன்பம் மட்டுமே உள்ள உலகத்தைச் சொர்க்கம் என்றும் இன்னாமையே உருவான ஓர் உலகை நரகம் என்றும் பெயரிட்டுத் தொன்மங்கள் புனைந்து கூறும்.
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்றது தொன்மங்களில் சொல்லப்பட்டுள்ள, ஒறுத்தலுக்குரிய தனியிடமான நரக உலகத்தைக் குறிக்கும் எனக் கூறினர். இதைத் தீயுழி என்றும் அளறு என்றும் குறள் கூறிற்று - ........ அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் (அடக்கமுடைமை 121 பொருள்: ...அடங்காமை நிறைஇருளான இடத்துள் செலுத்திவிடும்), உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு (புலால்மறுத்தல் 255 பொருள்: உயிருக்கு உறுதியான நிலை, ஊன் உண்ணாமையால் உள்ளது; ஊன் உண்பானாயின் அவனது உடலை ஏற்க நரகமும் வாய்திறக்காது).
'இருள்சேர்ந்த இன்னா உலகம்' என்பது அறியாமையும் துன்பமும் செறிந்த தீயவர் உலகம் எனப் பொருள்படும்
|
அருள் நிறைந்த நெஞ்சினை உடையார்க்கு இருளடைந்த தீயவர் உலகத்தில் சென்றுசேர்தல் இல்லை என்பது இக்குறட்கருத்து.
அருளுடைமை தீயவர்வாழுமிடத்தில் ஒருவரைக் கொண்டு சேராமல் காக்கும்.
அருள் பொருந்திய நெஞ்சம் கொண்டவர் இருளடைந்த தீயவர் உலகம் சென்றுசேர்தல் இல்லை.
|