இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0283



களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

(அதிகாரம்:கள்ளாமை குறள் எண்:283)

பொழிப்பு (மு வரதராசன்): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.

மணக்குடவர் உரை: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.
இது பொருள் நிலையாதென்றது.

பரிமேலழகர் உரை: களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
(ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: களவு செய்தலினால் வந்த செல்வம், வளர்வது போலத் தோன்றி அளவிற்கு மிஞ்சிய பொருட்கேட்டினை விளைக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களவினால் ஆகிய ஆக்கம் ஆவது போல அளவிறந்து கெடும்.

பதவுரை: களவினால்-திருட்டினால், வஞ்சமாகக் கவர்ந்த பொருளினால்; ஆகிய-ஆன; ஆக்கம்-செல்வம்; அளவு-எல்லை; இறந்து-கடந்து; ஆவது-ஆதல்; போல-ஒத்திருப்ப; கெடும்-அழியும்.


களவினால் ஆகிய ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம்;
பரிப்பெருமாள்: களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம்;
பரிதி: கபடத்தினால் பெற்ற செல்வம்; [கபடம் - வஞ்சனை]
காலிங்கர்: தமது உரவினான் ஆகிய ஆக்கமன்றிப் பிறர் பொருளைக் களவினால் விரும்பிய ஆக்கம் உளதாகில்; [உரவு- வலிமை]
பரிமேலழகர்: களவினால் உளதாகிய பொருள்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. [ஆக்கம் - மேன்மேல் உயர்தல்]

'களவிற் கொண்ட பொருளாலாகிய ஆக்கம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'களவினால் வந்த செல்வம்', 'களவினால் கவரும் பொருள்', 'திருட்டுத் தொழிலால் அடையக்கூடிய செல்வம்', 'ஏமாற்றித் திருடியதால் உண்டான செல்வம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

களவினால் கொண்ட செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

அளவிறந்து ஆவது போலக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள் நிலையாதென்றது.
பரிப்பெருமாள்: மேன் மேலும் ஆவதுபோலக் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அளவிறப்பு-மிகுதி. இது பொருள் நிலையாதென்றது.
பரிதி: ஆகிறாப் போலே அழிந்துபோம் என்றவாறு.
காலிங்கர்: அப்பொழுதைக்கு ஆவதுபோலக் காட்டிப் பின்பு விளையும் காலத்து உயிர்க்கேடும் பொருட்கேடும் உறுப்புக்கேடும் எனஇவை முதலான கேடும் வந்து பின்பு நரகத்தில் தள்ளும்.
பரிமேலழகர்: வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

'ஆகிறாப் போலே அழிந்துபோம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிகவும் பெருகுவது போலத் தோன்றிக் கெடும்', 'அளவு கடந்து வளர்வதுபோலத் தோன்றி அழிந்துவிடும்', 'அளவிட முடியாதபடி பெருகுவது போலக் காட்டி, திடீரென்று இல்லாது போகும்', 'அளவு கடந்து பெருகுவது போலத் தோன்றி அழிந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆகுவதுபோலத் தோன்றி அளவுகடந்து அழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களவினால் கொண்ட செல்வம் ஆகுவதுபோலத் தோன்றி அளவிறந்து அழியும் என்பது பாடலின் பொருள்.
'அளவிறந்து' என்றதன் பொருள் என்ன?

உள்ள உடைமைகளையும் களவுச்செயல் முற்றிலுமாக ஒழித்துவிடும்.

களவின்மூலம் வரும் வளர்ச்சி மிகுவதுபோல் தோன்றி அளவுகடந்த கெடுதி உண்டாக்கும்.
பிறரது பொருளை வஞ்சகமாகக் கவர்வது களவு. நேர்மை தவறி வரும் இருட்டுப் பொருள் அனைத்தும் களவின்கண் கொண்ட பொருளாகவே கருதப்பெறும். முறையற்ற வழியில் சேர்த்த செல்வம் பெருகுவது போல் காட்டிப் பெரும் அழிவைத் தரும்; நேர்மையில்லாமல் கொள்ளை, கொலை, கொள்கையில்லா அரசியல், கையூட்டுபெறல், கடும்வட்டி வாங்குதல், கலப்படம், கள்ளச்சந்தை போன்ற கொடுஞ்செயல்களும் களவில் அடங்கும். இவற்றால் வியக்கத்தக்க வகையில் பணம் குவிப்பவர்களை உலகோர் காணத்தான் செய்கின்றனர். களவினால் ஒருவன் பொருள் சேர்த்துச் சேர்த்து, புகழும் பயனும் அடைவதை, மக்கள் வியப்போடு பார்க்கிறார்கள். அப்பொழுது வள்ளுவர் சொல்லுகிறார்: 'களவினால் ஆகிய ஆக்கம் குவிகிறது போலத் தோன்றும். ஆனால் அது ஓர் நிலைக்களன் அல்ல. ஒரு கட்டத்தில் அவை எண்ண முடியாத அளவுக்கு கேட்டை உண்டாக்கி விடும்'.

களவினால் உண்டாய செல்வம் வளர்வது போலத் தோன்றி அளவற்ற அழிவுக்குக் காரணமாகும் என்கிறது பாடல். குறள் இவ்வாறு கூறுவது அறம் சார்ந்த நம்பிக்கையினால் மட்டுமல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் நம் கண்முன்னே காணக்கூடிய அழிவு நிகழ்வுகளே அது உண்மையுமாகும் என்பதைத் தெரிவிக்கின்றன.
களவின்கண் ஆக்கம் பெற்றவன், சட்டத்தின் பிடியிலிருந்து சிலவேளைகளில், தப்பி விட்டாலும் இயற்கை தரும் தண்டைனையிலிருந்து அவனுக்கு உய்வில்லை. இயற்கை உரிய நேரத்தில், உரிய முறையில் தன் நீதியை வழங்கிவிடும். அது நாம் எதிர்பார்க்கும் நேரத்திலோ நாம் எதிர்பார்க்கும் அளவிலோ அமையாமல் போகலாம். ஆனால் களவுக் குற்றம் புரிந்தவனை இயற்கை ஒறுக்கும்போது அது எவ்வளவு மில்லை என்று சொல்லும்படி அளவிறந்ததாக இருக்கும்.

....தீயன ஆவதே போன்று கெடும் (பழமொழி நானூறு 173 பொருள்: தீச்செயல்களால் உண்டாகிய செல்வம் பெருகுவதேபோன்று தோற்றுவித்துக் கெட்டுப்போகும்) என்று சொல்கிறது பழமொழிப் பாடல் ஒன்று.

'அளவிறந்து' என்றதன் பொருள் என்ன?

'அளவிறந்து' என்றதற்கு மேன் மேலும், தன் எல்லையைக் கடந்து, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து, அளவு கடந்து, எல்லைகளைக் கடந்து, மிகவும், அளவிட முடியாதபடி, அளவில்லாமல், அளவிற்கு மிஞ்சிய, அளவுக்கு மீறி, என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு ‘அளவிறந்து ஆவதுபோலக்கெடும்’ என்றும் ‘களவினான் ஆகிய ஆக்கம் ஆவதுபோல அளவிறந்துகெடும்' என்றும் விளக்கம் செய்தனர். 'களவினால் உண்டாயசெல்வம் எல்லைகடந்து வளர்வது போலத் தோன்றினாலும் அழிந்துபோம்' என்றும் ‘ஆவதைக் காட்டிலும் அழிவது மிகுதி’ என்றும் கூறினர். அளவிறந்து கெடும் என்பதற்குக் காலிங்கர் 'உயிர்க்கேடும் பொருட்கேடும் உறுப்புக்கேடும் எனஇவை முதலான கேடும் வந்து பின்பு நரகத்தில் தள்ளும்' என விளக்குவார். பரிமேலழகர் ‘பழியையும் பாவத்தையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போம்' என்பார். வீரமாமுனிவர் 'தன்னுடைய எல்லை கடந்தால் போலும் அழிவு கொண்டு விடும்' என உரைத்தார். மேலும் 'வைக்கலிலே பத்தி யிருக்கிற நெருப்பு வக்க லளவிலே நில்லாமல் அதனுடைய எல்லை கடந்து கிட்ட யிருக்கிற தெல்லாத்தையுஞ் சுடும். அப்படிப் போல,களவினால் வந்த பொருளழிந்து போறது மல்லாம லழிகிறபோது தன்னுடைய அளவிலே நில்லாமல் அதைக்கடந்து களவில்லாமல் சம்பாதித்த பொருளுக்கு மழிவு கொண்டு விடும்' எனவும் 'களவினால்வந்த பிரயோசனம் தான் கொண்டிருக்கிற பாவமென்கிற கேடல்லாமல் தனக்குப் பிரத்தியேகமா யிருக்கிற புண்ணியங்களுக்குங் கூட அழிவு கொண்டு விடும்' எனவும் கருத்துரைத்தார். அளவிறந்து கெடுதலாவது, புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போவது போல், தான் போகும்போது முன்பிருந்த செல்வத்தையும் தன்னொடு சேர்த்துக் கொண்டு போவதாம்,
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். (தெரிந்து செயல்வகை 463 பொருள்: வரப்போகும் மேம்பாடு எண்ணி உள்ள முதற்பொருளை இழக்கும் செயலில் அறிவுடையவர்கள் ஊக்கம் கொள்ள மாட்டார்கள்) , ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு (சூது 932 பொருள்: ஒரு பொருள் வென்று நூறு பொருள் தோற்கும் சூதாடிகளுக்கும் நலம்பெற்று வாழும் வழியுண்டோ?) ஆகிய பாடல்கள் களவு பற்றியன அல்ல என்றாலும் இவ்வேளையில் இவற்றையும் இணைத்து எண்ணிப்பார்க்கலாம்.

'அளவிறந்து' என்றதற்கு ‘அளவறந்து’ என்றும் ‘அளவறிந்து’ என்றும் பாடம் கொண்டனர். 'அளவறந் தாவது போலக் கெடும்’ என்றவர்கள் தன் செலவுக் குதவுவது போல இருந்து உதவாது கெடும் என்று உரைத்தனர். 'அளவறிந்து' எனக் கொண்டவர்கள் பொருளானது தன்னைக் களவாற் கொண்டவர் தன் பயனை அனுபவிக்குங்கால் அளவினை யறிந்து (கெடும்). அவ்வாறு அத்துய்க்கும்காலத்திற்கு உதவாமல் அழியுமென்று பொருள் கூறினர். இவற்றுள் 'அளவிறந்து' என்னும் பாடமே பொருட் சிறப்புடையதாயுள்ளது.

'அளவிறந்து' என்றது அளவு கடந்து எனப்பொருள்படும்.

களவினால் கொண்ட செல்வம் ஆகுவதுபோலத் தோன்றி அளவுகடந்து அழியும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கள்ளாமையே அழியாப் பொருள்வாழ்வு நல்கும்.

பொழிப்பு

களவினால் வந்த செல்வம் பெருகுவது போலத் தோன்றி அளவுகடந்து அழியும்