எல்லா விளக்கும் விளக்கல்ல:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல;
பரிப்பெருமாள்: எல்லாவறத்தின் உண்டான ஒளியும் ஒளியல்ல;
பரிதி: எல்லா விளக்காவன: தானம், தன்மம், கல்வி, ஞானம், பூசை என்பன;
பரிமேலழகர்: புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா;
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்தார் விளக்காவன: ஞாயிறு, திங்கள், தீ என்பன.
'எல்லாவறத்தினாலும் உண்டான ஒளியும் ஒளியல்ல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தானம், தன்மம், கல்வி, ஞானம், பூசை என்பன: எல்லா விளக்காவன' என்றார். 'புறத்து இருள் கடியும் உலகத்தார் விளக்குகள் எல்லாம் விளக்கு ஆகா' என்பது பரிமேலழகரின் உரை.
இன்றைய ஆசிரியர்கள் 'புறத்தே யுள்ள இருளைப் போக்கும் எல்லா விளக்கும் விளக்காகா', 'மற்ற விளக்குகள் அல்ல', 'வெளியிருளை நீக்கும் ஞாயிறு, திங்கள், தீ முதலிய விளக்குகளெல்லாம் சிறந்த விளக்காகமாட்டா', 'குணங்களால் அமைந்த பெரியார்க்குப் புற இருள் போக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் ஆகா' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எல்லாம் ஒளியும் விளக்கம் அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொய்யாவிளக்குச் சான்றோர்க்கு இன்றியமையாதென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது (பொய்யாவிளக்குச்) சான்றோர்க்கு இன்றியமையாமை கூறிற்று.
பரிதி: இந்த விளக்கிலும் பொய் சொல்லாததே விளக்கு என்றவாறு.
பரிமேலழகர்: துறவான் அமைந்தார்க்கு விளக்காவது மனத்து இருள் கடியும் பொய்யாமை ஆகிய விளக்கே.
பரிமேலழகர் குறிப்புரை: இவற்றிற்குப் போகாத இருள் போகலின் 'பொய்யா விளக்கே விளக்கு' என்றார். அவ்விருளாவது அறியாமை. 'பொய்யாத விளக்கு' என்பது குறைந்து நின்றது. பொய் கூறாமையாகிய விளக்கு என்றவாறு. இனி இதற்குக் 'கல்வி முதலியவற்றான் வரும் விளக்கம் அல்ல: அமைந்தார்க்கு விளக்கமாவது பொய்யாமையான் வரும் விளக்கமே', என்று உரைப்பாரும் உளர்.
'சான்றோர்க்குப் பொய்யாமையா னுண்டான ஒளியே ஒளியாகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சால்புடையார்க்கு உள்ளத்தின் இருளைப் போக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்காகும்', 'சத்தியம்தான் உயர்ந்த அறிவுடைய மேலோர்க்கு வழி காட்டும் விளக்கு', 'நல்லோர்க்கு அகத்திருளை நீக்கும் பொய்யாமை என்னும் விளக்கே இவற்றினுஞ் சிறந்த விளக்காகும்', 'அக இருள் போக்கும் அணையாத பொய்யாமை என்ற விளக்கே சிறந்த விளக்காகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சான்றோர்க்கு பொய்யாமையினால் உண்டாகும் ஒளியே விளக்காகும். என்பது இப்பகுதியின் பொருள்.
|