சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு;
மணக்குடவர் குறிப்புரை: சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.
பரிப்பெருமாள்: சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு;
பரிப்பெருமாள் குறிப்புரை: சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.
பரிதி: தன்னைச் சேர்ந்தபேரை அகலப்பண்ணுகின்ற கோபம் என்னும் நெருப்பு;
காலிங்கர்: உலகத்துச் சான்றோரால் கொடியவற்றுள் மிகவுங் கொடியது இது என்று (எடுத்துச்) சொல்லப்பட்ட அடைந்தாரைக் கொல்லியாகிய கொடுந் தீயானது;
பரிமேலழகர்: சினம் என்னும் நெருப்பு;
பரிமேலழகர் குறிப்புரை: 'சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே, இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது.
'சினம் என்னும் நெருப்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தீ சினங்கொண்டானையும் கொல்லும்', 'சினமென்னும் கொடும்தீ', 'சேர்ந்தவர்களைக் கொன்றுவிடக்கூடிய கோபம்', 'தன்னைச் சேர்ந்தாரைக் கொல்லுஞ் சினமென்னும் நெருப்பானது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அடைந்தாரைக் கொல்லும் சினமென்னும் நெருப்பு என்பது இப்பகுதியின் பொருள்.
இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.
பரிப்பெருமாள்: துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்.
பரிதி: தனக்கு உறவானாரைக் கொல்லும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இத்துறவோர்க்குத் துணையாகிய அருளும் பொறையும் ஆசாரமும் முதலிய சேமமாகிய தெப்பத்தைச் சுட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். [இடமானவரை- தான் பற்றுதற்கு இடமாக இருப்பவரை]
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.
'துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'உறவானாரைக் கொல்லும்' என்றார். காலிங்கர் 'துறவோர்க்குரியதாகக் கொண்டு அவர்க்கு துணையாக நிற்கும் அருளும் பொறையும் ஆசாரமும் முதலியவற்ரிச் சுட்டுவிடும்' எனப் பொருள் கூறுவார். பரிமேலழகர் 'இனமாகிய ஏமப்புணையையும் சுடும்' என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இனமாகிய துணையையும் எரிக்கும்', 'தன்னுடையவனேயன்றி அவனுக்குத் துணையாகும் நல்லோராகிய இன்பத் தெப்பத்தையும் சுட்டொழிக்கும்', ',ஒருவனுக்கு அபாய காலத்தில் பாதுகாப்பாக இருக்கக்கூடிய துணைவர்களையும் கடிந்து புண்படுத்தி விலக்கிவிடும்', 'சினங் கொண்டவர்க்குச் சுற்றத்தாராய் நின்று அவரைத் துன்பக்கடலினின்று பாதுகாக்கும் தெப்பம் போன்றவரையும் அவரிடமிருந்து விலக்கிவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
காப்புத் தெப்பமாக இருக்கும் இனமாகிய துணையையும் அவரிடமிருந்து விலக்கிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|