கேட்பினும் கேளாத் தகையவே :
பதவுரை: கேட்பினும்-கேட்டாலும்; கேளா-கேட்காத; தகையவே-தன்மையுடையனவே.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்;
பரிப்பெருமாள்: ஓசை மாத்திரம் கேட்டனவாயின் அதுவுங் கேளாத செவி போலும்;
பரிதி: செவி கேட்டாலும் செவிடு ஒக்கும்;
காலிங்கர்: இவ்வுலகத்துப் பயின்று வருகின்ற வழக்குச் சொல்லளவே யாண்டும் எப்பொழுதும் கேட்டு வரினும் மற்று எஞ்ஞான்றும் கேளாத்தகைமைப்பாட்டன;
பரிமேலழகர்: தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம்;
பரிமேலழகர் குறிப்புரை: ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது.
'காது கேட்டாலும் அது கேளாத செவி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓசை கேட்டாலும் முழுச் செவிடுகளே', 'தம் புலனுக்கேற்ப கேட்கும் தகுதியுடையனவேயாயினும் செவிடாம்',
'ஓசையைக் கேட்கக்கூடியனவாய் இருந்தாலும் செவிடாந்தன்மை உடையனவே', 'ஓசையைக் கேட்கும் இயல்பின ஆயினும் செவிடாம் தன்மையவே
ஆம்' என்றபடி உரை தந்தனர்.
கேட்க முடிந்தாலும் அது கேளாதது போன்றதே என்பது இத்தொடரின் பொருள்.
கேள்வியால் தோட்கப் படாத செவி:
பதவுரை: கேள்வியால்-கேட்டலால்; தோட்கப் படாத-துளைக்கப்படாத; செவி-காது.
இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி.
மணக்குடவர் கருத்துரை: இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
பரிப்பெருமாள்: நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.
பரிதி: கேள்வியினால் துளைவிடாத செவி என்றவாறு.
காலிங்கர்: யாவை எனின், சான்றோருழைச் சென்று தாம் கேட்கும் கேள்வியாகின்ற கூரிய கடைகோலான் இரண்டாவது துளையிடப்படாத செவிகள் என்றவாறு.
பரிமேலழகர்: கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
பரிமேலழகர் விரிவுரை: ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு
வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.
'கேள்வியால் துளைக்கப்படாத செவி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேள்வியறிவு நுழையாத செவிகள்', 'கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள்', 'நல்ல நூற்கேள்வியால் துளைக்கப்படாத செவிக',
'நல்ல நூற்பொருளைக் கேளாத காதுகள்' என்றபடி பொருள் உரைத்தனர்.
கேள்வியால் துளைக்கப்படாத செவி என்பது இத்தொடரின் பொருள்
|