பகல்வெல்லும் கூகையைக் காக்கை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்;
பரிப்பெருமாள்: இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்;
பரிதி: பகற்காலம் கூகையைக் காக்கை வெல்லும். இராக்காலம் காக்கையைக் கூகை வெல்லும்;
காலிங்கர்: கூகையாகிய புள்ளினை எறியுமிடத்துத் தனக்கு வாய்த்த காலமாகிய பகற்பொழுதின்கண் சென்று அடர்த்து வெல்லும் காக்கையானது மற்று அங்ஙனமே வெல்லும் காக்கையை எறியுமிடத்துத் தனக்கு வாயத்த காலமாகிய இருட்பொழுதின்கண் சென்று அடர்த்து வெல்லும் கூகையானது; .
பரிமேலழகர்: தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும்,
'கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காக்கை கோட்டானைப் பகலில் வென்றுவிடும்', 'தன்னைவிட வலிமையுடைய ஆனால் பகலில் கண் தெரியாத கோட்டானைக் காக்கை பகற்பொழுதில் வென்றுவிடும்', '(அச்சம் மிகுந்த வலிமை குறைந்த) காக்கை (அதைவிட அச்சம் குறைந்து வலிமை மிகுந்ததான்) ஆந்தையைப் பகற்பொழுதில் வென்றுவிடும்', 'பகற்பொழுதிலே காக்கையானது தன்னிலும் வலிய ஆந்தையை வெல்லும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பகற்பொழுதிலே காக்கை ஆந்தையை வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.
இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும்
மணக்குடவர் குறிப்புரை: இது காலமறிதல் வேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும்
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலமறிதல் வேண்டும் என்றது.
பரிதி: அத்தன்மை போலக் காலமறிந்துசெயலில் வெல்லலாம் என்பது.
காலிங்கர்: இனி இவைபோலத் தம்மில் தாம் மாறுபட்டுப் பொரும் மன்னவர்க்கும் தமக்குச் செயமாகிய வாய்ப்புடைக் காலம் அறிந்து அடர்த்தலே இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது.
பரிமேலழகர் குறிப்புரை: எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.
'அது போலப் பகைவரது மாறுபாட்டை வெல்ல அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் அறிதல் இன்றியமையாதது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தர் வெல்லும் காலம் பார்க்க வேண்டும்', 'அதுபோலப் பகையை வெல்லக் கருதும் அரசனுக்கு ஏற்ற காலம் வேண்டும்', 'அதைப்போல அரசனுக்குத் தன் எதிரிகளை வெல்லுவதற்குத் தக்க காலம் வேண்டும்', 'ஆதலின் பகைவரை வெல்லக் கருதும் அரசருக்குக் காலம் இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அதுபோல மாற்றாரை வெல்லக் கருதும் ஆட்சியாளருக்குக் காலம்அறிதல் இன்றியமையாதது என்பது இப்பகுதியின் பொருள்.
|