கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்; [வேண்டும் அளவு - சுற்றத்திற்குத் தேவையான அளவு]
பரிப்பெருமாள்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்;
பரிதி: பொருள் கொடுத்தலும் இன்சொல்லும் உள்ள அரசர்க்கு;
காலிங்கர்: பொருள் வழக்கமும் இன்சொல் வழக்கமும் இவர்க்கு நடத்த வல்லவன் ஆயின்; [இவர்க்கு என்பது சுற்றத்தாரை உணர்த்திற்று]
பரிமேலழகர்: ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். [இரண்டும்-வேண்டுவ அளித்தலும் இன்சொற் கூறுதலும்; அளவறிந்தாற்றுதல் - செல்வ முதலியவற்றில் தனதளவையும் சுற்றத்தின் அளவையும் தெரிந்து அவ்வளவிற்கேற்பச் செய்தல்]
'பொருள் கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வேண்டுமளவு' கொடுத்தலைச் சொல்கிறார்; பரிமேலழகர் 'வேண்டுவன' கொடுத்தலைக் குறிக்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றத்திற்குக் கொடுத்தலையும் இனியசொல் இயம்புதலையும் ஒருவன் செய்வானாயின்', 'வெகுமதிகளைக் கொடுப்பதும் இனிமையான வார்த்தைகளையே பேசுவதும் செய்வதால்', 'சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலும், இன்சொல் சொல்லுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின்', 'வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் சொல்லுதலையும் செய்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.
பரிப்பெருமாள்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாலே சூழப்படுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.
பரிதி: தொன்று தொட்டு வருகிற உறவின் முறை உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன் பெரிதும் பயின்ற சுற்றத்தினால் சூழப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும். [தொடர்ந்த - ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றம்]
பரிமேலழகர் குறிப்புரை: தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப. [அவற்றாற் பிணிப்புண்டு - சுற்றமும் அதனது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றால் நெருங்கச் சூழப்பட்டு]
'சுற்றத்தாராலே சூழப்படுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அடுக்கிய என்ற சொல்லுக்கு தனக்கு முன்னாகியும் பின்னாகியும், தொன்றுதொட்டு வருகின்ற உறவின் முறை, பெரிதும் பயின்ற, தம்மில் தொடரந்த பலவகை என்று இவர்கள் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பலவாறாகத் தொடர்ந்து வரும் சுற்றத்தால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான்', 'ஒருவன் அணியணியாகப் பல சுற்றத்தார்களால் சூழப்பட்டவனாக இருப்பான்', 'தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலரால் அவன் சூழப்படுவன்', 'தம்மில் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தினரால் சூழப்படும் நிலை ஏற்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
தொடர்ச்சியாய் உள்ள சுற்றம் பலவால் சூழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|