பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்:
பதவுரை: பொது-பலவும் ஒரு தன்மையவாதல்; நோக்கான்-பாராதவனாக; வேந்தன்-மன்னவன்; வரிசையா-தகுதிக்கு ஏற்ற தன்மையாக; நோக்கின்-பார்த்தால்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின்;
பரிப்பெருமாள்: எல்லோரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே அரசன் பார்ப்பானாயின்;
பரிதி: அரசன் உறவின் முறையரான பதினெட்டுப் பேர் முதலான பேரை, எல்லாரும் ஒக்கும் என்று விசாரியாமல் தராதர பாவனையறிந்து பார்ப்பானாகில்;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன முறைமையின் பொதுப்பட அணைத்தலேயும் அன்றிப் பின்னும் பிறர் குலமும் ஒழுக்கமும் குணமும் கல்வியும் முதலிய மேம்பாட்டு வேற்றுமையானும் குறிக்கொண்டு அணைப்பனாயின்;
பரிமேலழகர்: எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.
'எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் தலைமைக் குணத்தைப் பார்ப்பானானால் என்றும் மற்றவர்கள் தகுதிக்கேற்ப நோக்குவானால் என்று சொல்கின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின்', '(ஒரு குடும்பி தன்னுடைய சுற்றத்தார் அனைவரையும் சரிசமானமாக நடத்தலாம். ஆனால் ஓர் அரசன்) தன் சுற்றமாகிய துணைவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தி விடாமல் அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்ய வேண்டும்', 'அரசன் எல்லாரையும் ஒரே தன்மையாக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால்', 'எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராது அரசன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பார்த்துச் சிறப்புச் செய்வானானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் அவரவர் தகுதிக்கேற்ப சிறப்பாக நோக்குவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.
அதுநோக்கி வாழ்வார் பலர்:
பதவுரை: அதுநோக்கி-அது பார்த்து; வாழ்வார்-வாழ்க்கை நடத்துபவர்; பலர்-பலர்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அத்தலைமையை நோக்கி வாழ்வார் பலர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்கள் பலர் உண்டானால் எல்லாரையும் ஒக்கப் பாராது நீதிமான் ஒருவனை இளவரசு ஆக்க வேண்டும் என்றது.
பரிதி: அது நோக்கி அரசனைச் சூழ்ந்து இருப்பார் பலர் என்றவாறு.
காலிங்கர்: மற்று அம்மரபு நோக்கித் தாமும் அங்ஙனம் ஒழுகுவர் உலகத்தோர்; எனவே இதனைப் படிமரபாகக் கொண்டு யாவரும் தம்தம் சுற்றம் ஓம்புவார் என்றவாறு. [படிமரபு - வரிசை நோக்கு; தகுதி பற்றிய முறை].
பரிமேலழகர்: அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.
'அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் இளவரசு பட்டத்தை அச்சிறப்பாகக் குறிக்கின்றனர் எனத் தோன்றுகிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'அதனால் வாழும் சுற்றத்தார் பலர்', 'அதனால் அநேகர் அரசனை விரும்பித் துணைப்பலமாகச் சூழ்ந்திருப்பார்கள்', 'அது தெரிந்து அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர் இருப்பர்', 'அச்சிறப்புக் கருதி வாழ்வார் பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது வாழ்வார் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.
|