குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்:
பதவுரை: குடி-குடிமக்கள்; புறம்-பிறர்; காத்து-காப்பாற்றி; ஓம்பி-பேணி; குற்றம்-பிழை; கடிதல்-ஒறுத்தல்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்;
பரிப்பெருமாள்: குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஓம்ப என்று திரிக்க.
பரிதி: குடியை அறுவகைப் பயம் தீர்த்துக் குடியில் உண்டான குற்றமெல்லாம் பார்த்துத் தீர்ப்பது;
காலிங்கர்: தமது அகங்காவல் குடிகட்கே இயல்பானது; அதனால் தனது கோல்கீழ் வாழும் குடிமக்களைப் புறங்காவல் காத்து மற்று அப்பாதுகாவற்கு இடையில் சோர்வு வராமல் செலுத்துமிடத்துக் குடிமக்கட்குச் சோர்வு முதலிய குற்றம் உளதாயின் அதனைக் கடியுமாறு கடிந்தொழுகுதல்;
பரிமேலழகர்: குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம்.
'குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்துத் தானும் நலியாமல் பேணி, நெறி பிறழ்ந்து நடந்தால் அவர்களைத் தண்டித்துக் குற்றம் போக்குதல்', 'குடிகளுக்குப் பிறர் துன்பம் செய்யாதபடி தீமைகளைத் தடுத்துப் பாதுகாப்பளிப்பதற்காகக் குற்றம் செய்கிறவர்களைத் தண்டிப்பது', 'குடிமக்களைப் பிறர் வருத்தாமற் காத்துத் தானும் வேண்டுவன உதவிப் பேணுதலுடன் அவர்கள் குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல்', 'குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, ஆவன செய்து வளர்த்து, குற்றங்கள் செய்தால் அவை நீக்கத் தண்டித்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, வளர்த்து, குற்றத்திற்காக அவர்களைத் தண்டித்தல் என்பது இப்பகுதியின் பொருள்.
வடுஅன்று வேந்தன் தொழில்:
பதவுரை: வடு-பழி; அன்று-இல்லை; வேந்தன்-மன்னவன்; தொழில்-கடமை.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமன்று; அரசன் தொழில்.
பரிப்பெருமாள்: குற்றமன்று; அரசன் தொழில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிறர்க்கு இன்னா செய்தல் அறம் அல்ல என்றார் ஆகலின், ஈண்டுக் கூறுகின்றது அறம் அல்லவாம் பிற என்று ஐயுற்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: செங்கோல் என்றவாறு.
காலிங்கர்: கொடுங்கோன்மை அன்று, அரசர்க்குச் செங்கோன் முறைமை என்றவாறு.
பரிமேலழகர்: வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.
'குற்றமன்று; அரசன் தொழில்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் காலிங்கரும் 'செங்கோன்மை' என்றனர். பரிமேலழகர் 'பழியன்று வேந்தனுக்குத் தொழில்' என உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசனுக்குக் கடமை; பழியாகாது', 'தவறன்று. அதுதான் அரசன் செய்ய வேண்டிய வேலை', 'வேந்தனுக்கு இழுக்காகாது. அஃது அவன் கடமையே', 'வேந்தனுக்குப் பழி அன்று; அவனுக்குரிய தொழில்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அரசுக்குப் பழியன்று; அவன் கடமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|