இன்மையின் இன்னாது உடைமை:
பதவுரை: இன்மையின்-இல்லாமையைவிட; இன்னாது-கொடியது; உடைமை-உடையனாக இருப்பது.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவினும் செல்வம் துன்பமாகும்;
பரிதி: மிடியிலும் பொல்லாது; [மிடி-வறுமை]
காலிங்கர்: உலகத்தோர்க்கு இன்னாதது யாதோ எனின், இல்லாமை அன்றே. மற்று அதனினும் சால இன்னாதது உடைமை;
பரிமேலழகர்: யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
'நல்குரவினும் செல்வம் துன்பமாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருளின்மையினும் உடைமை கேடுதரும்', 'ஒருவனது பொருளுடைமை பொருளில்லாத வறுமையைக் காட்டிலும் துன்பம் தரும்', 'ஏழையாக இருப்பதைக் காட்டிலும் செல்வமுடையவனாக இருப்பது துன்பம் உண்டாக்கக் கூடியது', 'வறுமையைப் பார்க்கிலுஞ் செல்வம் உடைமை துன்பந் தருவது ஆகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருளின்மையினும் செல்வம்உடைமை துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
முறைசெய்யா மன்னவன் கோல் கீழ்ப்படின்:
பதவுரை: முறை-நீதி; செய்யா-செய்யத; மன்னவன்-வேந்தன்; கோல்-(கொடிய)ஆட்சி; கீழ்-உள்ளாக; படின்-வாழின்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.
பரிதி: கொடுங்கோல் மன்னவன் மண்டலத்திற் குடிகள் மிடைப்படுவது.[மிடைப்படுவது - செறிந்திருப்பது]
காலிங்கர்: அது எவ்விடத்து எனின் முறைமை செய்யாத மன்னவனது கொடுங்கோலிடத்தகப்பட்ட குடிகட்கு என்றவாறு.
பரிமேலழகர்: முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்.
பரிமேலழகர் குறிப்புரை: தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.
'முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின் கீழே குடியிருக்கின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நீதியில்லா மன்னனது ஆட்சிக்கு உட்படின்', 'முறை செய்யாத அரசனது கொடுங்கோல் ஆட்சியின் கீழே வாழ நேர்ந்தால்', '(அரசன் செய்யவேண்டிய முறையாகிய) காவல் செய்யாத மன்னவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தால்', 'முறை செய்யாத அரசனது கொடுங்கோலின் கீழ் வாழ்ந்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
|