இனத்துஆற்றி எண்ணாத வேந்தன்:
பதவுரை: இனத்து-இனத்தின் மேல்; ஆற்றி-வைத்து; எண்ணாத-நினைத்து ஆராயாத; வேந்தன்-மன்னவன்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன்; [அமைந்து-மனம் பொருந்தி]
மணக்குடவர் குறிப்புரை: இனம்- மந்திரி, புரோகிதர்.
பரிப்பெருமாள்: பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனம் ஆயினாரோடு அமைந்து ஆராயாத அரசன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இனம் என்றது மந்திரி, புரோகிதரை.
பரிதி: தன்னைச் சேர்ந்த துன்மந்திரிகளையும் மற்றுமுள்ள பேரையும் வாழவைத்துக் குடிகளை மிடைபண்ணும் அரசன்; [மிடைபண்ணும் - துன்புறுத்தும்]
காலிங்கர்: வேற்றரசரோடு வினை செய்யும் இடத்தும் அத்தனையும் முன்கோலித் தன்னோடு எண்ணுதற்கு உரிய இனத்தோடு எண்ணிச் செலுத்தாத மன்னனானவன்; [முன்கோலி-முன்னாடி]
பரிமேலழகர்: காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்;
'பிறர் குற்றத்தைத் தனக்கு இனம் ஆயினாரோடு ஆராயாத அரசன்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'தன்னுடைய அமைச்சர்களையும் மற்றவர்களையும் பேணி, குடிகளைத் துன்புறுத்தும் அரசன்' என்று விளக்கினார். காலிங்கர் 'போர் செய்வதற்கு முன் உரிய இனதோடு எண்ணாத மன்னன்' என்றார். பரிமேலழகர் பொதுமையில் 'காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்' என உரை வரைந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் அமைச்சரைக் கலந்து செய்யாது', 'அமைச்சர் முதலிய தன் இனமாயினாரோடு சேர்ந்து ஆராயாத அரசன்', '(குற்றத்தின் இனம், குற்றம் செய்தவருடைய இனம் ஆகிய)இனத்தின் அளவாகஆராயாமல், ஒரு வேந்தன்', 'அரசன் தன்னைச் சார்ந்தவர்களாகிய அமைச்சர் முதலியோர்களிட்ம் தன் காரியங்களைச் செப்பிஅவரோடு கலந்து அவற்றை ஆராயாது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அரசியல் சுற்றத்தோடு கலந்து செய்யாத ஆட்சித்தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்.
சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு:
பதவுரை: சினத்து-வெகுளியாகிய குற்றத்தின் கண்; ஆற்றி-செலுத்தி; சீறின்-சினந்தால்; சிறுகும்-சுருங்கும்; திரு-செல்வம்.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடியசொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின் அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின் அவன்செல்வம் குறையுமென்றாவறு. இனம்- மந்திரி, புரோகிதர்.
பரிப்பெருமாள்: சினத்தின் நெறியானே சீறுவானாயின் செல்வம் குறைவுபடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது செல்வம் குறைபடும் என்றது.
பரிதி: சினமேற் கொண்டால் அச்செல்வமும் சிறுகும் என்றவாறு.
காலிங்கர்: சினத்து வழிபற்றிக் கன்றி எழுவனேல் சிறுகும் செல்வம். [கனறி - சினந்து]
காலிங்கர் குறிப்புரை: எனவே, அரசன் உரிமை அழிவன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும். [அப்பிழைப்பால் - அத்தவற்றான்; தப்பிய வழி- தவறியபோது]
பரிமேலழகர் குறிப்புரை: அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன. [பகுதி- அரச காரியம் பார்ப்பவர்களின் கூட்டம்]
'சினத்தின் நெறியானே சீறுவானாயின் செல்வம் குறைவுபடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'ஆட்சித்தலைவன் தனது தவற்றிற்கு அமைச்சர் மற்றும் அரச காரியம் பார்ப்போரிடம் சீறவானாயின்' என ஒரு விளக்கமும் தருவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சினங்கொண்டு செய்யின் செல்வம் சுருங்கும்', 'வெகுளி வயப்பட்டுச் சீறி எழுவானாயின் அவனது செல்வம் குறையும்', 'தன்னுடைய கோபத்தின அளவாக மிதமிஞ்சி தண்டனை செய்தால் அவனுடைய பலம் சுருங்கிவிடும்', 'தன்னைச் சினத்திற் செலுத்தி அவர்களை வெகுண்டால் அவனுடைய செல்வஞ் சுருங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வறிதே சினம் கொண்டுசீறிச் செயல்படுவானாயின் ஆட்சிச்செல்வம் சுருங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|