உள்ளம் உடைமை உடைமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைமையாவது ஊக்கமுடைமை;
பரிப்பெருமாள்: உடைமையாவது அறிவுடைமை;
பரிதி: அரசர்க்கு உடைமையாவது விசாரமுடைமை;
காலிங்கர்: மற்று ஆகலான் ஊக்கமுடைமையே ஒருவர்க்குச் செல்வமானது;
பரிமேலழகர்: ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது;
பரிமேலழகர் குறிப்புரை: 'உள்ளம்' ஆகுபெயர்.
'ஊக்கமுடைமையே ஒருவர்க்குச் செல்வமானது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கச் சொத்தே சொத்து', 'ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வமாகும்', 'மனவலிமைதான் ஒருவருக்குச் சொந்த உடைமையாகும்', 'ஊக்கம் உடைமையே ஒருவர்க்கு நிலைத்து நின்ற உடைமையாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊக்கம் பெற்றிருத்தலே ஒருவனுக்குச் செல்வமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
பொருளுடைமை நில்லாது நீங்கி விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்.
மணக்குடவர் குறிப்புரை: பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: மற்றப் பொருள் முதலாகிய செல்வம் நில்லாது தன்னை விட்டு நீங்கும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பொருள் உடையார்க்கு எல்லா முண்டாம் என்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அது இல்லாதபோது எட்டுவகைச் செல்வமும் கெடும் என்றவாறு.[எட்டுவகைச் செல்வம் - அடிமை, அரசாங்கம், சுற்றம், நெல், பொன், மக்கள், மணி, வாகனம் என்பர்.]
காலிங்கர்: மற்று இவ்வுலகத்துப் பொருளானது நிலையாது.
காலிங்கர் குறிப்புரை: முன்னை வினை வழியினால் தமக்கு வரும் பொருள் வருதலும், கெடும்பொருள் கெடுதலும் யாவராலும் ஒழித்தற்கு அரிது ஆதலான், மற்று உணர்வு ஊக்கம் ஆகின்றது. அவ்விருபாலும் சிறந்ததாகலான் இதனை ஒப்பதோர் ஆக்கம் வேறில்லை என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைப் பொருள் உடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.
'பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருட்சொத்து நில்லாது போய்விடும்', 'ஏனைப் பொருட்செல்வம் நிலைபெறாமல் சென்றுவிடும்', 'பொருள் உடைமை அவருடன் நிற்கக்கூடியதல்ல. அவரை விட்டுப் பிரிந்துவிடக் கூடியது', 'ஏனைய பொருள் உடைமை நிலைத்து நில்லாது நீங்கி விடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருட்செல்வம் நில்லாது நீங்கி விடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|