மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி;
பரிப்பெருமாள்: நெஞ்சத்து மடியினாலே வினையின்கண் மடித்தலைச் செய்து ஒழுகாநின்ற அறிவிலி பிறந்தகுடி;
பரிதி: மடித்த புத்தியுள்ளவன் கெடுவதற்கு முன்னே;
காலிங்கர்: மடித்தலாகிய இதனைத் தன்மாட்டுக் கொண்டு ஒழுகும் மடவோனாகிய மன்னவன்;
காலிங்கர் குறிப்புரை: மடி மடிக்கொண்டு ஒழுகும் என்பது மடியாகிய இதனைத் தன்மேல் வைத்துக்கொண்டு என்றது.
பரிமேலழகர்: விடத்தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி;
'உள்ளத்துச் சோம்பலாலே தொழிலிற் சோம்பலுறும் அறிவிலி பிறந்தகுடி' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'மடியைத் தன்மேல் வைத்துக்கொண்டு ஒழுகும் மடவன்' என்றார். பரிமேலழகர் 'மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும் அறிவில்லாதான் பிறந்த குடி' என உரை தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலைத் தன் அடிமடியிலே வைத்துக்கொண்டு நடக்கும் அறிவிலி பிறந்த குடும்பம்', 'சோம்பேறித்தனம் மிகவும் உள்ளவனான ஒரு மூடன் பிறந்த குடித்தனம்', 'சோம்பலைத் தன்னிடத்தே கொண்டு ஒழுகும் அறிவில்லாதவன் பிறந்த குடி', 'சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவிலாதான் பிறந்த குடி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சோம்பலை மடியிலே வைத்துக்கொண்டு ஒழுகும் அறியான் பிறந்த குடும்பம் என்பது இப்பகுதியின் பொருள்.
மடியும் தன்னினும் முந்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு முன்பே கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: சோம்புடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: தனக்கு முன்பே கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மடியுடைடையார்க்கு உளதாகுங் குற்றம் என்னையென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: அவன் உறவின் முறை முந்தக் கெடும் என்றவாறு.
காலிங்கர்: தான் மாய்தலேயும் அன்றித் தன்னினும் முந்துறத் தனது குடி முழுதும் மாயும் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் தன்னினும் முந்துற அழியும்.
பரிமேலழகர் குறிப்புரை: அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின் 'பேதை' என்றும்; அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும் முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும் அழிவில் முற்படும் என்பதாம்.
'தனக்கு முன்பே கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவனினும் முன்னதாக அழியும்', 'அவன் இறந்து போவதற்கு முன் (அவன் காண அவனால்) கெட்டுப் போகும்', 'அவனைப் பார்க்கிலும் முற்பட்டு அழியும்', 'அவனுக்கு முன் அழிந்துவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவனுக்கு முன் விரைந்தழியும் என்பது இப்பகுதியின் பொருள்.
|