குடியாண்மை உள்வந்த குற்றம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது;
மணக்குடவர் குறிப்புரை: குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.
பரிப்பெருமாள்: குடியையாள்தலை உடைமையின்கண் வந்த குற்றமானது;
பரிப்பெருமாள் குறிப்புரை: குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமை வருங்குற்றம்.
பரிதி: தன் குடியிலே ஒரு குற்றம் வந்தால்;
காலிங்கர்: குடிகளைத் தான் ஆண்டு ஒழுகுமிடத்து அவர்க்கு வந்து எய்திய வடுப்பாடும், மற்று அம்மன்னவன் தனக்கு வந்த வடுப்பாடும்; [வடுப்பாடு - குற்றப்படுதல்]
பரிமேலழகர்: அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை.
'குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது' என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கூறினர். காலிங்கர் 'குடிகளுக்கான குற்றமும் அரசனுக்கு வந்த குற்றமும்' என உரை கூறினார். பரிமேலழகரும் 'குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் என வேறு இருவகைக் குற்றங்களைக் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பம் நடத்துகையில் வந்த குறைபாடுகள்', 'ஒருவன் தன் குடும்பத்தை நடத்துவதில் உண்டாகும் குற்றம்', 'ஒரு குடும்பத்துக்கு வந்துவிட்ட பல துன்பங்களும்', 'ஒருவன் தனது குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குடும்பத்தை ஆளும் தன்மையில் உள்ள குற்றம் என்பது இப்பகுதியின் பொருள்.
ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்.
பரிப்பெருமாள்: ஒருவன் மடி ஆள்தல் உடைமையைக் கெடுக்கக் கெடும். இது மடி இல்லார்க்குப் போக்கலாம் என்றது.
பரிதி: மடித்த புத்தியை விட்டுக் காரியவாதியாகில் அந்தக் குற்றம் கெடும் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் இங்ஙனம் வந்த மடியாட்சியைத் தவிர்க்கவே கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே;
பரிமேலழகர் குறிப்புரை: மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.
'ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பலை ஒழிக்கவே நீங்கிப்போம்', 'அவன் தன் சோம்பலுடைமையை ஒழிக்கவே கெடும்', '(அக்குடும்பத்திலுள்ள) ஒருவன் சோம்பலுக்கு இடங்கொடாமல் உழைத்தால் தீர்ந்து போகும்', 'அவன் தனது சோம்பலுடைமையை ஒழிக்கவே நீங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தன்னை ஆண்டு கொண்டிருக்கும் சோம்பலை ஒருவன் ஒழித்து விடுவானானால் தீர்ந்துவிடும். என்பது இப்பகுதியின் பொருள்.
|