வினைக்கண் வினைகெடல் ஓம்பல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க;
பரிப்பெருமாள்: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க;
பரிதி: ஒரு காரியத்தை எடுத்தால் அந்தக் காரியம் குறையாமல் முடிப்பான்;
காலிங்கர்: அரசரானோர் தமக்குத் தகுவதாகிய கருமம் செய்ய முயலும் இடத்து அதற்குப் பழுது வராமல் பாதுகாத்து (ச்செய்யப்படும்);
பரிமேலழகர்: அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.
'வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க', 'ஆதலால் தொடங்கிய தொழிலை முடிக்காது அரைகுறையாக விடுதலைத் தவிர்க', 'ஆதலால் காரியத்தைத் தொடங்கியபின் அதை இடையில் விட்டுவிடக் கூடாது', 'ஆதலின் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
பரிப்பெருமாள்: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
பரிதி: அப்படிக்கு ஏதொரு காரியமும் முடிப்பவனை உலகம் கைவிடாது என்றவாறு.
காலிங்கர்: வினை குறைபாடு2 நீங்கிய பெரியோர் மாட்டே தெளிவுற நிலைபெற்றது இவ்வுலகம் என்றவாறு.[வினை குறைபாடு-எடுத்த முயற்சியில் முடிவு பெறாமலிருப்பது]
பரிமேலழகர்: வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது.
பரிமேலழகர் குறிப்புரை: குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.
'வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கடமையை விட்டாரை உலகம் விட்டு விடும்', 'வினைக்குறையை நிறைவேற்றாது விட்டாரை உலகம் கைவிட்டது', 'ஒரு காரியத்தைச் செய்துவிடுவதாக அதைத் தொடங்கி (அதை முடிக்காமல்) காரியத்தை இடையில் விட்டு விடுகிறவனை உலகத்தாரும் கவிட்டு விடுவார்கள்', 'வினையின் குறையைச் செய்யாது விட்டாரை உலகம் கை விட்டது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|