இடுக்கண் வருங்கால் நகுக:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக;
பரிப்பெருமாள் :தனக்குத் துன்பம் வந்த காலத்து அதனை இகழ்ந்து நகுக;
பரிதி: இடுக்கண் வந்த காலத்து நகுக;
காலிங்கர்: உலகத்து அரசரானோர் தமக்கு யாதானும் ஒரு வழியால் இடுக்கண் வந்த இடத்துக் கலங்காது மகிழ்ந்திருக்க;
காலிங்கர் குறிப்புரை: நகுக என்பது மகிழ்ந்திருக்க என்றது;
பரிமேலழகர்: ஒருவன் வினையால் தனக்கு இடுக்கண் வருமிடத்து, அதற்கு அழியாது உளமகிழ்க;
'தனக்குத் துன்பம் வந்த காலத்து நகுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் உரை துன்பம் வருவது பிறன் செய்யும் வஞ்சகத்தால் என்று கருதச்செய்கிறது.
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பம் வரும்போது கேலிசெய்க', 'ஒருவன் தனக்குத் துன்பம் வரும்போது அதற்கு வருந்தாது எள்ளி நகையாடுக', 'இடையூறு ஏற்படும்போது அதற்கு மனக்கலங்காது மகிழ்க', 'துன்பம் வரும்போது அதனைக் கண்டு வருந்தாது உள் மகிழ்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
துன்பம் வந்த காலத்து அதைச் சிரித்து ஒதுக்கிவிடுக என்பது இப்பகுதியின் பொருள்.
அதனை அடுத்தூர்வது அஃதொப்பது இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.
பரிதி: அது துன்பத்தை அறுக்கிற அரம் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின், மற்று இவ்விடுக்கணினை அடர்ந்து மேற்பட்டு; நின்று நக வல்லனாயின், இதனை ஒப்பது ஓர் இன்பம் பிறிது யாதும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அதனை அடுத்தூர்வது என்பது அவ்விடுக்கணினை நெருக்கி மீதுபோய் நிற்கவல்லது என்றது.
பரிமேலழகர்: அவ்விடுக்கணை மேன்மேல் அடர வல்லது அம் மகிழ்ச்சி போல்வது பிறிதில்லையாகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான்,
'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.
'அத்துன்பத்தை மேன்மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே துன்பத்தைக் கடக்க வழி', 'அத்துன்பத்தை அடக்கி வெல்லக் கூடியது அந்நகைப்புப் போல வேறில்லை', 'அதனைக் கடப்பதற்கு அம்மகிழ்ச்சியைப்போல வேறொரு கருவியும் இல்லை', 'அத் துன்பத்தை நெருங்கி வெல்லக்கூடியது அதனைப் போன்று வேறொன்றுமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அத்துன்பத்தை மேன்மேலும் நெருக்கிப் போராட வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|