சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல்;
பரிப்பெருமாள்: வஞ்சத்தாலே பொருள்தேடி மகிழ்ந்திருத்தல்;
பரிதி: அநீதியினால் தேடும்பொருள் தன்னையும் கெடுத்துத் தானும் போம்;
காலிங்கர்: இது நமக்கு உறுதி அன்று என்று கருதாது பிறரொடு சலம் பற்றிக்கொண்டு மற்று அதனால் பொருளினைச் செய்து யாம் உடையம் என்று இறுமாந்திருத்தல் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்;
பரிமேலழகர் குறிப்புரை: முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு,
இப்பகுதியிலுள்ள சலத்தால் பொருள்செய்து என்ற தொடர்க்கு 'வஞ்சத்தாலே பொருள்தேடி' என்ற பொருளிலே அனைத்துப் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆனால் ஏமார்த்தல் என்றதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'மகிழ்ந்திருத்தல்' என்றும் காலிங்கர் 'இறுமாந்திருத்தல்' என்றும் உரை செய்தனர். பரிமேலழகர் மாறுபாடாக 'ஏமஞ்செய்தல்' எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஏமாற்றிக் கொண்ட பொருள் நிலைக்காது', 'பழிதரும் காரியங்களைச் செய்து பணம் சம்பாதித்துப் பூட்டி வைத்துச் சேமிப்பது', 'தீவினையால் பொருள் சேர்த்து அதற்குக் காப்பமைத்தல்', 'தீய வினைகளால் பொருளை உண்டாக்கிப் பாதுகாத்து வைத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஏமாற்றிப் பொருளீட்டி மகிழ்ந்திருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.
பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.
பரிப்பெருமாள்: பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, தானும் பொருளுங் கூடிக் கெடும் என்றது.
பரிதி: எப்படி என்றால் பச்சை மண் பாத்திரத்தில் வார்த்த தண்ணீரும் பாத்திரமும் கெட்டாற்போலே என்றவாறு.
காலிங்கர்: மண்ணான் வனைத்துளவாகிய பசுங்கலத்தினகத்து நீரினைப் பெய்து இருத்திய அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.
'பசுமட்கலத்திலே நீரை முகந்துவைத்த தன்மைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சுடாத மண்பானையில் நீர் தங்குமா?', 'வேக வைக்காத பச்சை மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றி மூடி வைப்பதைப் போன்றது', 'பச்சை மண்கலத்தில் தண்ணீரை ஊற்றி அதனைக் காப்பது போலாம்', 'சுடாத பசிய மண் குடத்துள் நீரை ஊற்றி வைத்ததை ஒக்கும். ('பசு மண் குட நீர் ஒழுகி ஓடிவிடுவது போல் தீவினையால் ஈட்டிய பொருளும் அழிந்துவிடும்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சுடாத பச்சை மண்பானையில் நீரை ஊற்றி வைப்பதைப் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.
|