அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;
மணக்குடவர் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை.
பரிப்பெருமாள்: அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: வேந்தனால் விரும்பப்படும் குணமாவது அவன் விரும்புமவற்றைத் தான் விரும்பாமை.
பரிதி: அரசன்மேல் அன்புடைமையும் நற்குலத்தில் பிறத்தலும் அரசனது மனமகிழ்ச்சி உள்ளவனும்;
காலிங்கர்: தன் அரசர்மாட்டு அன்பு பெரிது உடையனுமாய்த் தான் நல்ல குடியில் பிறந்தானுமாய், வந்து பயிலுந்தொறும் வேந்தனானவன் விரும்பும் மரபு உடையனுமாய்;
பரிமேலழகர்: தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும், அமைச்சுப் பூணற்கு அமைந்த குடியின்கண் பிறத்தலும், அரசர் சாதி விரும்பும் பண்புடையன் ஆதலும்;
பரிமேலழகர் குறிப்புரை: முன்னைய இரண்டனாலும், முறையே சுற்றத்தார்க்கும் தீங்கு வாராமல் தான் பேணியொழுகலும், தன் முன்னோர் தூதியல் கேட்டறிதலும் பெற்றாம், வேந்து அவாம் பண்பு உடைமை முன்னர் மன்னரைச் சோந்தொழுகற்கண் பெறப்படும். அதனால் வேற்றரசரும் அவன் வயத்தராதல் பெறுதும்.
'அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மட்டும் அன்புடைமை என்றதற்குத் 'தன் சுற்றத்தார்மாட்டு அன்புடையனாதலும்' என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும்', 'அன்புடைமையும் நற்குடியில் பிறத்தலும் அரசர் விரும்பும் பண்புடையனாதலும்', 'தன்னைத் தூதாக அனுப்புகிறவனுக்கு அன்புள்ளவனாகவும், குற்றமற்ற குடும்பத்தைச் சேர்ந்தவனாகவும், அரசர்கள் விரும்பத் தகுந்த பழக்க வழக்கங்கள் உள்ளவனாகவும் இருக்க வேண்டியது', 'தன்னைச் சார்ந்தார்மாட்டு அன்புடைமையும், உயர்ந்த குடிப்பிறப்பும், அரசன் விரும்பக்கூடிய குணநலமும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நாட்டுப் பற்றுடைமை நல்ல குடும்பத்தில் பிறந்திருத்தல் ஆள்வோர் விரும்பும் மரபு உடையனுமாய் இருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.
தூதுரைப்பான் பண்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.
பரிப்பெருமாள்: தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்.
பரிதி: தூதுவன் என்றவாறு.
காலிங்கர்: இம் மூன்று குணமும் உடையான் அரசர்க்குத் தூது உரைப்பான் என்றவாறு.
பரிமேலழகர்: தூது வார்த்தை சொல்வானுக்கு இலக்கணம்.
'தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தூதுவனுக்கு உரிய தகுதிகள்', 'தூது செல்வானுக்குரிய இயல்புகள்', 'தூது சென்று வேற்றரசரிடம் பேச வேண்டியவனுடைய தகுதி', 'தூதுசொல்வான் தன்மைகளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தூதுவனுக்கு உரிய இயல்புகள் என்பது இப்பகுதியின் பொருள்.
|