அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும்;
பரிப்பெருமாள்: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும் என்னும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆராய்ந்த என்றமையால் கல்வியாயிற்று.
பரிதி: அரசன்மேல் அன்புடைமையும், அறிவுடைமையும் அரசர்க்கு இழுக்கம் வாராத சொற்சொல்லும் சொல்வன்மையும்;
காலிங்கர்: அரசர்மாட்டு அன்பு பெரிதுடைமையும் இயற்கையானும் தெளிந்த அறிவுடைமையும், சொல்லும் சொல் ஏற்றத்தாழ்வு இல்லாத சொல்வன்மையும் என்னும்;
பரிமேலழகர்: தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என;
பரிமேலழகர் குறிப்புரை: ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல்.
'அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் வாளா அன்புடைமை எனக் கூற மற்றவர்கள் அரசன்மாட்டு அன்புடைமை எனப் பொருள் உரைத்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு அறிவு தெளிந்த பேச்சுவன்மை', 'அன்புடைமை, அறிவுடைமை, ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் என', 'தன் அரசன்மாட்டு அன்பும் அவனுக்கு ஆவதை அறியும் அறிவும், சொல்லின் பயன்தெரிந்து அதனைச் சொல்லுந் திறமையும்', 'அன்பும் (யாவரிடத்திலும்) அறிவும் எதனையும் ஆராய்ந்து சொல்லும் திறனும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தூதில் காதலுடைமை, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் என' என்பது இப்பகுதியின் பொருள்.
தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
மணக்குடவர் குறிப்புரை: இத்துணையும் தூதர் இலக்கணம் கூறியவாறு.
பரிப்பெருமாள்: மூன்றும் தூதுரைப்பார்க்கு இன்றியமையாதது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய குணங்கள் எல்லாவற்றினும் இவை மூன்றும் இன்றியமையாதன என்று கூறிற்று. இத்துணையும் தூதர் இலக்கணம் கூறிற்று.
பரிதி: உள்ளவன் தூதன் என்றவாறு.
காலிங்கர்: இம்மூன்றும் அரசர்க்குத் தூதுரைக்கும் அமைவுடையோர்க்கும் பெரிதும் இன்றியமையாது என்றவாறு.
பரிமேலழகர்: தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.
'தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை', 'தூது செல்வார்க்கு உரிய இன்றியமையாத பண்புகள் மூன்றாகும்', 'தூது பேசுவார்க்கு இல்லாமல் தீராத (இன்றியமையாத) மூன்று குணங்களாம்', 'தூதராகச் சென்று உரைப்பார்க்குத் தவிர்க்க முடியாத மூன்று இயல்புகளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை என்பது இப்பகுதியின் பொருள்.
|