அறிவுரு ஆராய்ந்த கல்வி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய;
மணக்குடவர் குறிப்புரை: அறிவு- இயற்கையறிவு.
பரிப்பெருமாள்: அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் ஆகிய;
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிவு- இயற்கையறிவு. உருவு-வடிவழகு. ஆராய்ந்த கல்வி-கலைகளை அறிந்து ஆராய்ந்ததனால் ஆட்சியான கல்வி.
பரிதி: அறிவுடைமை, அழகு, கல்வி;
காலிங்கர்: முன்னமே தான் இயல்பாக அறிவுடையனாதலும் மன்னரும் பிறரும் மகிழ்ந்து அணைத்தற்குரிய வடிவுடையனாதலும், கீழ்ச்சொன்ன வரம்பின் அன்றி மற்றும் பல ஆராய்ந்த கல்வி உடையனாதலும் என்னும்;
பரிமேலழகர்: இயற்கையாகிய அறிவும் கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும் பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என;
'அறிவும், வடிவும், தெளிந்த கல்வியும் ஆகிய' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு, தோற்றம். தெளிந்த கல்வி', 'இயற்கை அறிவு, கண்டார் விரும்பும் தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும்', 'தூது போகும் காரியத்துக்கு வேண்டிய சமயோசித அறிவு, யாரும் மதிக்கத் தகுந்த கம்பீரமான உருவம், ஆராய்ச்சியுள்ள படிப்பு', 'இயற்கை நல்லறிவும், தோற்றப் பொலிவும், தேர்ந்த படிப்பும் ஆகிய' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இயற்கை அறிவு, தோற்றப் பொலிவு, ஆராய்ச்சியில் தேர்ந்த கல்வி என்னும் என்பது இப்பகுதியின் பொருள்.
இம்மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('மூன்றின்' என்பது பாடம்): இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க.
பரிப்பெருமாள்: இம் மூன்றினது அடக்கம் உள்ளவன் வினைக்குச் செல்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவையிற்றினது அடக்கமாவது, இம்மூன்றினால் வரும் பெருமிதத்தை அடக்கி ஒழுகுதல்.
பரிதி: இம்மூன்றும் உள்ளான் தூது செல்வான் என்றவாறு.
காலிங்கர் ('மூன்றின்' என்பது பாடம்): இம்மூன்றினையும் உடையனாய் இருக்கின்றான் யாவன்; மற்று அவன் செல்வானாக அரசர் காரியத்துக்கு என்றவாறு.
பரிமேலழகர்: நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க.
பரிமேலழகர் குறிப்புரை: இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்' என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.
'இம் மூன்றினது அடக்கமுடையவன்' வினைக்குச் செல்க என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். செறிவுடையான் என்றதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'அடக்கமுடையவன்/அடக்கம் உள்ளவன்' என்றும் பரிமேலழகர் 'கூட்டத்தை உடையான்' எனவும் பொருள் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக', 'இம்மூன்றினிடத்தும் அடக்கமுடையவன் தூது வினைக்குச் செல்வானாக. (செறிவு-அடக்கம். 'செறிவறிந்து சீர்மை பயக்கும்'. 123)', 'இந்த மூன்றும் யாரிடத்தில் அதிகமாக இருக்கிறதோ அவன் தூது காரியத்திற்குப் போகட்டும்', 'மூன்றும் உடையவனே தூது போக வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இம்மூன்றினது அடக்கமுடையவன் தூதுதொழிலுக்குச் செல்லட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
|