தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்;
மணக்குடவர் குறிப்புரை: தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம்.
பரிப்பெருமாள்: தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தள்ளா விளையுள்- மழையில்லாத காலத்தினும் சாவிபோகாத நிலம். தக்கார்-குலத்தாலும் குணத்தாலும் அமைந்தார். தாழ்வு இல்லாத செல்வர் - பிறரால் இகழப்படாத செல்வர்; பிறர்க்குப் பயன்படும் செல்வர் என்றது.
பரிதி: மாறா விளைச்சலும், நல்லோரும் குறைவில்லாத செல்வரும்;
காலிங்கர்: மாறாது விளையும் விளைச்சலும், தகுதியால் சிறந்த கல்வியும் ஞானமும் உடைய சான்றோரும், நாளும் யாவர்க்கும் ஈயக் குறைபடாத செல்வம் உடையோரும்;
பரிமேலழகர்: குன்றாத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேடு இல்லாச் செல்வமுடையோரும்;
பரிமேலழகர் குறிப்புரை: மற்றை உயர்திணைப் பொருள்களோடும் சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார். 'நற்றவஞ்செய்வார்க்கு இடம்: தவம் செய்வார்க்கும் அஃது இடம்' (சீவக. நாமக.48) என்றார் பிறரும். இதனான் அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத் தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும் அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும் வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.
'தப்பாமல் விளையும் நிலங்களும் தகுதி யுடையாரும் தாழ்வில்லாத செல்வரும்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
பரிதி 'மாறா விளைச்சலும், நல்லோரும் குறைவில்லாத செல்வரும்' என்றார். காலிங்கர் 'மாறாது விளையும் விளைச்சலும், தகுதியால் சிறந்த கல்வியும் ஞானமும் உடைய சான்றோரும், நாளும் யாவர்க்கும் ஈயக் குறைபடாத செல்வம் உடையோரும்' என்று கூறினார். பரிமேலழகர் 'குன்றாத விளையுளைச் செய்வோரும் அறவோரும் கேடு இல்லாச் செல்வமுடையோரும்' எனப் பொருள் உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குறையாத விளைவை உண்டாக்கும் உழவரும் நடுநிலையுடையவரும் பிறரால் இகழப்படாத ஈத்துவக்கும் செல்வரும்', 'வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவுப் பொருட்கள் விளையக்கூடிய நிலங்களும் அந்த நிலங்களில் பாடுபடத் தக்க உழவாளிகளும் குற்றமற்ற வழியில் செல்வத்தை வளர்க்கக்கூடிய வணிகரும் சேர்ந்துள்ளது', 'காலந் தப்பாது உழவுசெய்து விளை பொருள் எடுப்பாரும், நன்னெறி ஒழுகுவோரும், கேடில்லாத செல்வம் உடையோரும் ஒருங்கு இருக்குமிடமே', 'குறையாத விளைபொருள்களும், அறவோரும், கேடு இல்லாத செல்வம் உடையோரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குறையாத விளைச்சலும், நடுநிலைமையாளரும், முயற்சியில் தாழ்வில்லாத ஆள்வினைச் செல்வரும் என்பது இப்பகுதியின் பொருள்.
சேர்வது நாடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சேர்வது நாடு.
பரிப்பெருமாள்: சேர்வது நாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இம்மூன்றும் எல்லா உயிர்க்கும் ஆகலின் சேரவேண்டும் என்று கூறப்பட்டது.
பரிதி: சேர்வது நாடு என்றவாறு.
காலிங்கர்: செறிந்து இயல்வது நாடு என்றவாறு.
பரிமேலழகர்: ஒருங்கு வாழ்வதே நாடாவது.
சேர்வது நாடு/செறிந்து இயல்வது நாடு/ஒருங்கு வாழ்வதே நாடாவது என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருங்கு வாழ்வதே நாடு', 'நல்ல நாடு', 'தக்க நாடாகும்', 'ஒருங்கு வாழ்வதே நாட்டின் சிறப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருந்தியுள்ள இடமே நாடாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|