கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை;
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் நாடு கெட்டதாயினும் பின்பும் ஒருவழியால் பயன்படுதல் கூறிற்று.
பரிப்பெருமாள்: கெடுதல் அறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினையே;
பரிதி: பிறர் நாட்டிற்போய் ஏதொன்றும் தேடாமலும், பகைவரால் கெடுதல் வராததாயும், வாழ்ந்தார் கெட்டால் நாட்டாண்மைக்காரனைச் செல்வனாக்குவதும்;
காலிங்கர்: வேற்று அரசரால் கேடு அறியாது யாதானும் ஒருவாற்றால் கெட்ட இடத்தும் பின்னும் விளைவளம் குறைவுபடாதாகிய நாடு யாது;
பரிமேலழகர்: பகைவரால் கெடுதலறியாததாய், அரிதின் கெட்டதாயினும் அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறியாத', 'குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை அரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது செயலானும் வரும். வளம் - ஆகரங்களிற் படுவனவும், வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை: அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன் ஈட்டப்பட்டும் குறைவறுதல். [ஆகரங்கள் -சுரங்கங்கள்; படுவன-பொன், வெள்ளி முதலியன; தண்டலை - சோலை]
'கெடுதலை யறியாதாய், கெட்டதாயினும் பயன்குன்றாத நாட்டினை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் 'வேற்று அரசரால் கேடு அறியாது' என்று கேடு உண்டாவதற்கான காரணமாக பகைஅரசரைச் சொல்கின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேடறியாது கெட்டாலும் வளங்குறையாது என்ற நாடே', 'பகைவரால் கேடு அறியாததாய் ஒருகால் கேடு வரினும் வளங் குன்றாததாய் உள்ள நாட்டினை', '(தன்னைப் பொறுத்த வரையிலும்) ஒரு கெடுதி வர இடமில்லாதிருப்பதோடு (பிறரால் கெடுதி செய்யப்பட்டு) அழிவுகள் வந்துவிட்ட காலத்திலும் (அவற்றை சமாளித்துக் கொள்ளும்படி) இயற்கை வளங்களில் குறைவில்லாமல் இருக்கிற நாடே', 'கேட்டினை அறியாததாய் கேடு வந்த பொழுதும் வளங்களில் குறையாததாய் உள்ள நாடே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கெடுதலை யறியாது, கேடு வரினும் வளங் குறையாத நாட்டினை என்பது இப்பகுதியின் பொருள்.
என்ப நாட்டின் தலை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள்: எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய விட்டில் முதலாயினவற்றால் கெட்டதாயினும் பின்பும் ஒருவாற்றால் பயன்படுதல் ஆவது தலையான நாடென்றது.
பரிதி: நாட்டுக்குச் சிகாமணி என்றவாறு. [சிகாமணி-முடிமணி]
காலிங்கர்: மற்று அது நாடுகளில் பெரிதும் தலைமைப்பாடு உடையது என்றவாறு.
பரிமேலழகர்: எல்லா நாட்டிலும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை ஆறு பாட்டானும் நாட்டது இலக்கணம் கூறப்பட்டது.
'எல்லா நாடுகளினும் தலையான நாடென்று சொல்லுவர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தலையான நாடு', 'நாடுகட்கு எல்லாம் மேலானது என்பர் நல்லோர்', 'எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்ல வேண்டும்', 'நாடுகளில் முதன்மையான நாடாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எல்லா நாடுகளிலும் சிறந்த நாடு என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
|