அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது; [நெறியில்லாதன - நீதிநெறியல்லாதன; கழறி - இடித்துரைத்து]
பரிப்பெருமாள்: குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது;
பரிதி: அழச்சொல்லிக் காரியம் உறுதியிட்டு நெறியில்லாத காரியம் தள்ளி உலக வழக்கறிய வல்லார்;
காலிங்கர்: நட்பானவன் இங்ஙனம் காரியமானது நிகழுமாறு சொல்லியும், நெறியல்லது செய்யுமிடத்து நெருக்கியும் செய்யத் தகும் முறைமை இது என்றறிதலும், இம்மூன்று நெறியும் வல்லவர் யாவர் சிலர் நல்லறிவாளர்; [நெருக்கி- கண்டித்து அறிவுரை கூறி]
பரிமேலழகர்: தாம் உலக வழக்கல்லது செய்யக்கருதின் சோகம் பிறக்கும்வகை சொல்லி விலக்கியும் செய்தக்கால் பின்னும் செய்யாவகை நெருக்கியும் அவ்வழக்குச் செய்யாவழிச் செய்விக்கவும் வல்லாரை; [சோகம் - துன்பம்; நெருக்கியும் - கண்டித்து அறிவுரை கூறியும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'அழச் சொல்லி', 'இடித்து' என வந்த பரிகார வினைகளான், அவற்றிற்கு ஏற்ற குற்றவினைகள் வருவிக்கப்பட்டன. வழக்கு - உலகத்தார் அடிப்படச் செய்து போந்த செயல். தம்மொடு நட்டாரும் அறியும் வகை அறிவித்தல் அரிதாகலின், 'அறிய வல்லார்' என்றார். இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. [பரிகார வினைகள்- நீக்கும் வழிகள்]
'குற்றம் கண்டால் அழுமாறு சொல்லி, நெறியில்லாதனவற்றிற்குக் கழறி, உலகவழக்கறிய வல்லாரது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழும்படி சொல்லி இடித்துரைக்கும் ஆற்றல் உடையவர்', 'குற்றங்கண்டால் வருந்தி அழுமாறு கூறி நெறியல்லாத செயல் புரிந்தால் இடித்துக்கூறி உலக வழக்கு அறியவல்லாரது', 'குற்றத்தை எடுத்துக் காட்டி இடித்துரைத்து (நம் குற்றத்தை நாமே உணர்ந்து) வருந்தும்படி (நல்ல முறையில்) பேசி நியாயவாதம் செய்து (அறிவுறுத்த) வல்லவர்களுடைய', 'வருந்தும் வகை அறிவுரை கூறி, தீயதைக் கடிந்து கூறி, உலக வழக்கினை அறியவல்ல பெரியவரின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வருந்தி அழுமாறு சொல்லி தீயதை இடித்துரைத்து உலக வழக்கு அறியவல்லாரது என்பது இப்பகுதியின் பொருள்.
நட்பு ஆய்ந்து கொளல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்பை ஆராய்ந்து கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இது மந்திரிகளுள் நட்பாக்கற் பாலாரைக் கூறிற்று. [நட்பாகற் பாலரை - நட்பாக ஏற்றுக் கொள்ளத்தக்காரை]
பரிப்பெருமாள்: நட்பை ஆராய்ந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மந்திரிகளின் நட்பு ஆவாரைக் கூறிற்று. அரசர் அல்லாதார்க்குத் தம்மில் உயர்ந்தாரை நட்பாக வேண்டும் என்று கொள்ளப்படும்.
பரிதி: நட்பு ஆய்ந்து கொள்க.
காலிங்கர்: அவரது நட்பினை ஆராய்ந்து கொள்க நட்குமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: ஆராய்ந்து நட்புக் கொள்க.
'நட்பை ஆராய்ந்து கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நட்பை உணர்ந்து கொள்க', 'நட்பினை ஒருவன் ஆராய்ந்து கொள்க', 'நட்பை நிச்சயமாக்கிக் கொள்ள வேண்டும்', 'நட்பினை ஆராய்ந்து தேடிக்கொள்க' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நட்புத்தொடர்பை ஆராய்ந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
|