உலகத்தார் உண்டு என்பது இல் என்பான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்;
பரிப்பெருமாள்: உலகத்து அறிவுடையார் பலரும் உண்டு என்பதொரு பொருளை இல்லை என்று சொல்லுமவன்;
பரிதி: பெரியோர் உள்ளதென்று சொல்லுமதை இல்லை என்று சொல்பவன்;
காலிங்கர்: திருந்திய கேள்வியின் உயர்ந்தோர் தெரிந்து உண்டு என்னும் மெய்ப்பொருளை அஃது இல்லை என்று கழறுவான் யாவன் ஒரு புல்லறிவாளன்; [திருந்திய கேள்வி-நன்றாகத் தெரிந்து அறிந்த நூலறிவினை யுடையார்; கழறுவான் - இடித்துரைப்பான்]
பரிமேலழகர்: உயர்ந்தோர் பலரும் உண்டு என்பதோர் பொருளைத்தன் புல்லறிவால் இல்லை என்று சொல்லுவான்;
'உலகத்தார்/பெரியோர்/உயர்ந்தோர் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுபவன்', '(புல்லறிவாளன்) உலகத்தார் உண்டு என்று சொல்லுவதை இல்லையென்று மறுப்பான்', 'உயர்ந்தோர் உண்டென்று அறிந்து கூறுவதை இல்லை என்று கூறுகின்றவன்', 'உலகத்தார் உண்டு என்று கூறும் உண்மைகளை அறியாமையால் இல்லையென்பான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உலகோர் உண்டு என்று கூறுவதை இல்லை என்று சொல்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.
வையத்து அலகையா வைக்கப்படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிப்பெருமாள்: இவ்வுலகின் கண்னே ஒரு பேய் என்று எண்ணப்படும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயர்ந்தோர் உண்டு என்பதனை இல்லை என்றல் புல்லறிவு என்றது.
பரிதி: பூமியில் பிசாசாய்த் திரிவன் என்றவாறு.
காலிங்கர்: அவனை ஈண்டு ஒரு மகன் என்று கருத அடாது; பின்னை என் எனின் பேய்களுடன் இவனும் ஒரு பேயாக வைத்து எண்ண அடுக்கும் என்றவாறு. [அடாது - பொருந்தாது; அடுக்கும்-பொருந்தும்]
பரிமேலழகர்: மகன் என்று கருதப்படான், வையத்துக் காணப்படுவதோர் பேய் என்று கருதப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: கடவுளும், மறுபிறப்பும், இருவினைப் பயனும் முதலாக அவர் உள என்பன பலவேனும், சாதி பற்றி உண்டு என்றும், தானே வேண்டியகூறலால் ஒப்பும், வடிவால் ஒவ்வாமையும் உடைமையின் தன் யாக்கை கரந்து மக்கள் யாக்கையுள் தோன்றுதல்வல்ல 'அலகை' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் உறுதிச்சொல் கொள்ளாமையது குற்றம் கூறப்பட்டது. [உறுதிச்சொல் - நன்மை பயக்கும் சொல்]
'உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பிசாசாகவே திரிவான்' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தில் அஞ்சத்தக்க பேயாகக் கருதப்படுவான்', 'அவன் உலகத்தை மருட்டும் ஒரு பேயாகக் கருதப்படத்தக்கவன்', 'உலகத்தாரால் பேயனாகக் கருதப்படுவான்', 'உலகத்தில் பேயாக (அஞ்சத் தக்கதாக)க் கருதப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உலகத்துக் காணப்படும் ஒரு பேயாகக் கருதப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.
|