எண்சேர்ந்த நெஞ்சத்திடனுடையார்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு;
மணக்குடவர் குறிப்புரை: எண்ணஞ்சேர்தல் - இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல்
பரிப்பெருமாள்: எண்ணஞ் சேர்ந்த மனத்தின் விரிவு உடையார்க்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: எண் சேர்தலாவது, இதனால் வருங்குற்றத்தினைத் தெரிந்துணர்தல். இதனை உடையார் அறிவுடையார் என்றது.
பரிதி: மோட்சம் இச்சையான மனத்தார்;
காலிங்கர்: அறம், பொருள், இன்பம், வீடு என நான்கின் திறம் தெரிந்து எண்ணும் எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு உடையார் யாவர்; [எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு- எண்ணங்கள் உடைய மனத்தில் இடம் பிடித்தவர்]
பரிமேலழகர்: கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. [குறள் 218, இதன் பொருள்: செல்வம் சுருங்கிய காலத்தும் என்பது; கலித்தொகை, பாலைக்கலி 1. இதன் பொருள்: (தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும்) பொருள் இல்லாது பிறரை இரந்து கேட்டவர்க்கு; அப்பொருட்டாதல் - செல்வம் என்னும் இப்பொருள் உடையதாதல்]
எண்ணஞ் சேர்ந்த மனத்தினை விரிவாக உடையார்க்கு/மோட்சம் இச்சையான மனத்தார்/அறம், பொருள், இன்பம், வீடு என நான்கின் திறம் தெரிந்து1 எண்ணும் எண் சேர்ந்த நெஞ்சத்தின் இடம்பாடு உடையார்/கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சிந்தனை செறிந்த மனத்திட்பம் உடையார்பால்', 'சொந்த அறிவின் ஆலோசனையுடன் மனோதிடமும் உள்ள (இருக்க வேண்டிய) ஆண்மக்களுக்கு', 'ஆலோசனை செய்யும் உள்ளமும் அதனால் உளதாய செல்வமும் உடையாரிடத்தே', 'கருமம் முடித்தலின் கருத்தினைச் செலுத்தும் உள்ளம் உடையார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சிந்தனையறிவு கொண்ட மன உறுதி உள்ளவர்கட்கு என்பது இப்பகுதியின் பொருள்.
எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்.
பரிப்பெருமாள்: எல்லா நாளும் பெண்ணைச் சார்ந்து ஆகும் அறிவின்மை இல்லையாம்.
பரிதி: பெண் சொல் கேட்டலாகிய பேதைமைக்கு உட்படார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர்க்கு எஞ்ஞான்றும் பெண்வழிச் சென்று சேர்ந்து ஏவல் கேட்டு ஒழுகும் பேதைமை சிறிதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும் உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.
'எல்லா நாளும் பெண்ணைச் சேர்ந்து ஆகும் அறியாமை இல்லையாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனைவி சொற்படி நடக்கும் மடமை இராது', 'மனைவியின் பேச்சைக் கேட்டுத்தான் செய்வது என்ற மூடத்தனம் இருக்காது; (இருக்கக் கூடாது)', 'மனையாள் வயப்பட்டொழுகும் அறியாமை எக்காலத்தும் இல்லை', 'எப்பொழுதும் பெண்ணை அடைந்து உண்டாகும் அறியாமை இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எப்போதுமே பெண்கள் போக்கில் ஒழுகிவாழும் அறிவுத்திரிபு இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|