இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும்;
பரிப்பெருமாள்: கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும்;
பரிதி: பொதுமகளும் கள்ளும் சூதும் ஆகிய இந்த மூன்றிடத்தில்;
காலிங்கர்: (இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் என்னும்) இம்மூவகைப் பொருள் அனைத்தும்;
பரிமேலழகர்: கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; [கவர்த்த - இரண்டுபட்ட]
பரிமேலழகர் குறிப்புரை: இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. [கவறு - சூதாடு கருவி]
'கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பரத்தையும் கள்ளும் சூதாட்டமும் ஆம்', 'பொருள் மேல் விருப்பும் ஆள் மேல் அன்பின்மையும் என இருவேறு மனம் படைத்த விலைமகளிரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும்', 'இரண்டு மனமுள்ள விலைமாதரும், கள் குடியும், சூதாட்டமும்', 'வேறுபட்ட மனத்தினை உடைய விலை மகளிரும், கள்ளும், சூதும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் என்பது இப்பகுதியின் பொருள்.
திருநீக்கப் பட்டார் தொடர்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருமகளால் கடியப்பட்டாரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்குரவாவார் சார்வரென்றது.
பரிப்பெருமாள்: திருமகளால் கடியப்பட்டாரது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்குரவிலார் சாராரென்றது. பின்பு கள்ளும் கவறும் கூறுகின்றார் ஆதலின், அவை மூன்றும் ஒத்த இயல்பின என்று அறிதற்குப் பின் கூறப்பட்டது. இவை நான்கினானுன் அவரைச் சார்வார் (கெடுவர் என்பது) கூறப்பட்டது.
பரிதி: மூதேவியிருப்பாள் என்று பெரியவர் விரும்பார் என்றவாறு.
காலிங்கர்: தாமே தம்வயின் நீக்கல் ஆற்றாரது மனத் தொடர்ச்சி என்றவாறு. [காலிங்கர் உரைப்பகுதி சிதைந்துள்ளது]
காலிங்கர் குறிப்புரை: 'இம்மையே தவஞ்செ யார்கை இருநிதி யகற்றல் வேண்டி நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்துவிட்டான்' என்றார் பிறரும் என அறிக.
பரிமேலழகர்: திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது. [குறிகளான் - அடையாளங்களால்; சேர்வார் - புணர்வார்]
'திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன', 'திருமகளால் கைவிடப்பட்டார்க்கு உறவாகும்', 'செல்வ மகளாகிய இலக்குமியால் விலக்கிவிடப் பட்டவர்களுடைய உறவுகள்', 'செல்வத்தினின்றும் நீக்கப்பட்டவர்க்கு நட்பு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு என்பது இப்பகுதியின் பொருள்.
|