துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்;
பரிப்பெருமாள்: உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்;
பரிதி: நித்திரையும் மரணமும் வேறல்ல;
காலிங்கர்: உலகத்து ஓவாது துஞ்சினார் என்றும் செத்தார் என்றும் வருவதன் பொருள் கருதின், இறந்து பட்டார் என்பதே தரவல்லது; துஞ்சினார் என்றது வேறு ஒன்றும் அல்ல; [ஓவாது-இடைவிடாது]
பரிமேலழகர்: உறங்கினார் செத்தாரின் வேறாதல் உடையரேனும், அக்காலத்து அறிவின்மையான் வேறு எனப்படார்;
'உறங்கினார் செத்தாரோடு ஒப்பர், அறிவிழத்தலான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துஞ்சினவர் என்பவர் செத்தவரே', 'மெய்ம்மறதி உற்றவர்கள் யாரானாலும் அவர்கள் உயிரற்ற பிணத்துக்கே சமானம்', 'தூங்கினவர் செத்தாரின் வேறாகத் தோன்றார்', 'உறங்கினார் செத்தாரைவிட வேறு அல்லர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உறங்கினார் செத்தாரைவிட வேறாகத் தோன்றார் என்பது இப்பகுதியின் பொருள்.
எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவிழப்பரென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரை ஒப்பர், மயங்குதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவிழப்பரென்றது.
பரிதி: நஞ்சு தின்பானும் கள்ளுண்பானும் சரி என்றவாறு.
காலிங்கர்: கள் உண்பவரும் நஞ்சு உண்பாரின் வேறு அல்லர் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வாறே கள்ளுண்பார் நஞ்சுண்பாரின் வேறாதல் உடையரேனும், எக்காலத்தும் அறிவின்மையான் வேறு எனப்படார், அவர்தாமே யாவர்.
பரிமேலழகர் குறிப்புரை: உறங்கினார்க்கும் கள் உண்பார்க்கும் வேற்றுமை உயிர்ப்பு நிற்றல். வேறாதலும் வேறன்மையும் உடைமை காட்டற்கு உவமை புணர்க்கப்பட்டது. இதனை நிரல்நிரை யாக்கி, 'திரிக்கப்படுதலான் உறங்கினாரும் நஞ்சுண்பாரும் ஒப்பர்; கைவிடப்படுதலான் செத்தாரும் கள்உண்பாரும் ஒப்பர்' என்று உரைப்பாரும் உளர். அதிகாரப்பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்ந்து ஈண்டுக்கூறல் பயனின்றாகலானும், சொற்கிடக்கை நிரல் நிரைக்கு ஏலாமையானும், அஃது உரையன்மை அறிக. இவை இரண்டு பாட்டானும் அவரது அறிவிழத்தற் குற்றம் கூறப்பட்டது. [உயிர்ப்பு நிற்றல்- மூச்சு நின்று விடுதல்]
'எல்லாநாளும் கள்ளுண்பார் நஞ்சுண்பவரோடு ஒப்பர், மயங்குதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கள்ளுண்பவர் என்பவர் நஞ்சுண்பவரே', '(ஆகையினால்) கள்ளுண்டு மெய்ம்மறதி அடைகின்றவர்கள் (கள்ளை உண்ணுந்தோறும் உயிரைப் போக்கிப் பிணமாக்கிவிடுகிற) விடத்தைச் சாப்பிடுகிறவர்களே ஆகிறார்கள்', 'அவ்வாறே கள்ளுண்பவர் எக்காலத்தும் உயிர்க்கு அறிகுறியாகிய அறிவை இழத்தலால் நஞ்சுண்டவரே ஆவர்', 'அவ்வாறே எப்பொழுதும் நஞ்சு உண்பவரினின்றும் வேறுபட்டவர் அல்லர் கள் உண்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கள் குடிப்பவர் எப்பொழுதும் நஞ்சுண்பவரே என்பது இப்பகுதியின் பொருள்.
|