உருள்ஆயம் ஓவாது கூறின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின்; [புரளும் கவற்றை- உருண்டு விழுகின்ற சூதாட்டக்கருவி]
பரிப்பெருமாள்: புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின்;
பரிதி: கவறு விழுந்த இலக்கம் எப்போதும் பேசுவார்க்கு;
காலிங்கர்: வாய்மையும் வழக்கும் கல்வியும் முதலிய தன் நாவினால் கூறும் நயம் இன்றி, என்றும் கவறு புரட்சியில் தோன்றும் தாயப் பெயர்களையே ஒழியாது கூறின்; [தாயப் பெயர்கள்-சூதாடு கருவியின் விழுகின்ற தாயம், இரண்டு முதலிய பெயர்கள்]
காலிங்கர் குறிப்புரை: உருளுதல் என்பது புரளுதல்; ஆயம் என்பது கவறு புரட்சியின் தாயம் என்றது;
பரிமேலழகர்: உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; [ஆயம் - வெல்லும் பொருள்]
பரிமேலழகர் குறிப்புரை: கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். [சூதாடு கருவியின் உருளுதலை அக்கவற்றினது உருட்சியினாலாகிய ஆயத்தின் மேல் ஏற்றி உருளாயம் என்று கூறப்பட்டது]
'உருளும் கவற்றை இடைவிடாது கூறுவானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'காயை ஓயாது சொல்லி உருட்டினால்', 'உருளும் சூதாடும் காயை இடைவிடாது கூறிச் சூதாடினால்', 'சூதாட்டம் ஓயவிடாது', 'உருளும் கவற்றின்கண் பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உருளும் சூதாட்டக்காயொடு பொருந்திய ஆயத்தை இடைவிடாது கூறினால் என்பது இப்பகுதியின் பொருள்.
பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிப்பெருமாள்: பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் கூறிய ஐந்தும் அடையாமைக்குக் காரணம் என்னை என்றார்க்கு, முயற்சி இன்மையான் இவற்றை உண்டாக்கற்குக் காரணமாகிய வருவாய் இல்லையாம் என்று அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. ['ஐந்து' -குறள் 939-ல் கூறப்பட்டுள்ள உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்பன]
பரிதி: பொருளாயமும் புறத்திற்படும் என்றவாறு.
காலிங்கர்: திரட்டிய பொருள் தொகை அனைத்தும் தம் இடத்தினின்றும் போய்க் கெட்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பொருளாயம் என்பது பொருள் கூட்டம் என்றது; படும் என்பது கெடும் என்றது.
பரிமேலழகர்: அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.
'பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வருவாய் ஓடிப்போய் விடும்', 'அவனது பொருள் வருவாய் அவனைவிட்டுப் போய்ப் பகைவரிடத்தே தங்கும்', 'சொல்லப்போனால் பண வருவாய்க்கு வழியே இல்லாமல் (உள்ளதெல்லாம்) தொலைந்து போய் அதன் பிறகே ஓயும்', 'பொருளால் வரும் ஊதியம் அவனைவிட்டு நீங்கிப் பிறரிடம் தங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பொருள் வருவாய் அவனைவிட்டு அகன்று வெளியே போய்விடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|