நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக:
பரிப்பெருமாள்: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக:
பரிதி: நல்லவராகப் பேர்பெற வேண்டினால் நாணம் வேண்டும்;
காலிங்கர்: தமது நல்லொழுக்கம் குன்றாமை வேண்டின், நம்மாட்டு ஒரு குறைவரின் என்னை என்னும் இந்நாணுடைமையை வேண்டும்;
பரிமேலழகர்: ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக;
பரிமேலழகர் குறிப்புரை: நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது.
'தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை வேண்டின் தீயது செய்ய நாணுக', 'ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணுடைமை வேண்டும்', 'சுகவாழ்வு வேண்டுமென்றால் பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்க வேண்டும்', 'ஒருவன் புகழ் புண்ணியம் முதலிய நன்மைகளை விரும்பினால், பழிபாவங்கட்குப் பயப்படும் நாணம் அவனுக்கு வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
மணக்குடவர் குறிப்புரை: இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிதி: குலம் வேண்டினால் எல்லோர்க்கும் வணக்கம் உண்டாயிருக்கவேண்டும் என்றவாறு.
காலிங்கர்: இனி நீர் நும்குலனுக்கு வேண்டினது யாவர்க்கும் இனிது இயலும் பணிவுடைமையை வேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.
பரிமேலழகர் குறிப்புரை: 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.
'குலனுடைமையை வேண்டுவானாயின், யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் யார்க்கும் என்பதற்கு 'பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக' எனச் சிறிது வேறுபடக் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'குலப்பெருமை வேண்டின் யார்க்கும் பணிக', 'குடியுயர்ச்சி வேண்டுமானால் எல்லாரிடத்தும் பணிவு வேண்டும்', 'நல்ல இனம் என்ற மதிப்பு வேண்டுமென்றால் பிறரிடத்தில் வணக்கமுள்ளவனாக நடந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும்', 'குலச்சிறப்பு வேண்டுவனாயின் யார்க்கும் பணிந்து நடத்தலை விரும்ப வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
குலப்பெருமை வேண்டுமானால் எல்லாரிடத்தும் வணக்கமாக நடந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
|