ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்:
மணக்குடவர் குறிப்புரை: இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மிகக் கொடுக்க வல்லாரைப் பெரியர் என்று கூறிற்று.
பரிதி: புகழாவது தருமம்;
காலிங்கர்: தமது உள்ளம் என்றும் பெருமைக்கண் சேறலே, ஒருவர்க்கு 'இவர் பெரியர்' என்று பேர்விளங்கும் தோற்றமாவது;
பரிமேலழகர்: ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி;
பரிமேலழகர் குறிப்புரை: ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' (குறள்.26) என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.
ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்/புகழாவது தருமம்/உள்ளம் என்றும் பெருமைக்கண் சேறலே, ஒருவர்க்கு 'இவர் பெரியர்' என்று பேர்விளங்கும் தோற்றமாவது/ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும்', 'ஒருவனுக்குப் புகழாவது ஊக்கம் மிகுதியாம்', 'ஒருவன் தன்னுடைய திறமையில் தன்னம்பிக்கை உள்ளவனாக இருப்பது புகழத்தக்கதுதான்', 'ஒருவனுக்கு பெரிய மதிப்பாவது அரியவற்றைச் செய்யக் கருதும் ஊக்க மிகுதி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒருவர்க்கு மதிப்பாவது அவருடைய ஊக்கம் மிகுதியே என்பது இப்பகுதியின் பொருள்.
இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்.
பரிப்பெருமாள்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்.
பரிதி: அது இல்லையாயின் அபகீர்த்தி பெறுவர் என்றவாறு.
காலிங்கர்: அதனால் அஃது ஒழிந்து உயிர் வாழ்தும் என்று கருத்துதல் தமக்குப் பெரிதும் இளிவரவாம்.
பரிமேலழகர்: ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.
அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்/ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும்', 'ஒருவனுக்கு இழிவாவது ஊக்கமொழிந்து உயிர்வாழ்வோம் என்று கருதுதலாம்', 'ஆனால் அதை அளவுக்கு மீறி மேற்கொண்டு வாழ நினைப்பது குற்றம்', 'ஒருவனுக்கு இழிவாவது, ஊக்கமில்லாது உயிர் வாழவேண்டும் என்று எண்ணுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதனை நீங்கி வாழ்தல் என்பது குறைபாடாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|