குணநலம் சான்றோர் நலனே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்;
பரிப்பெருமாள்: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்;
பரிதி: குணநலம் சான்றோர்க்குப் பொறுமை;
காலிங்கர்: சான்றோர் நலம் யாதோ எனின், தமது உள்ளத்து அமைவு உடையர் என்னும் இந்நலமே ஆகலான்;
பரிமேலழகர்: சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே;
'சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நற்குணமே பெரியவர்தம் நலம்', 'சான்றோர் நலமாவது குணங்களாலாய நலங்களே', 'சான்றோர்கள் விரும்பும் செல்வமே குணச் சிறப்புதான்', 'சான்றோர் சிறப்பாவது குணத்தால் வரும் சிறப்பே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குணங்களாலாய நலங்களே சான்றோர் சிறப்பாம் என்பது இப்பகுதியின் பொருள்.
பிறநலம் எந்நலத்து உள்ளதூஅம் அன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குணநலம் பிறநலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது, குணநலம் சால்பிற்கு அழகு என்றது.
பரிப்பெருமாள்: அக்குணநலம் பிறநலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குணநலம் சால்பிற்கு அழகு என்றது.
பரிதி: பிறநலம் கல்வி, ஞானம், பெருமை எல்லாம் ஒன்றாகச் சொல்லப்படாது என்றவாறு.
காலிங்கர்: இவ்வமைவுதான் வேறு யாவை சில நன்மையினும் உள்ளது ஒன்று அன்று; எனவே எல்லா நன்மையினும் இவர்க்குச் சிறந்தது அதுவே என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன. [சால்பிற்கு- நிறைவிற்கு]
'அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறநலங்கள் அவர்க்கு ஒரு நலமும் இல்லை', 'குணநலம் அதனை ஒழிந்த கல்வி, அறிவு முதலியவற்றான் வரும் பிறநலன்களாகிய எல்லா நலங்களிலும் உள்ளதொரு நலமன்று (சிறப்புடையது)', 'அது இல்லாத மற்றெந்தச் சிறப்பும் எந்த நன்மையிலும் சேர்ந்ததாக அவர்கள் கருத மாட்டார்கள்', 'பிற சிறப்புக்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் வைத்து எண்ணப்படுவன அல்ல' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிற நலங்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் அடங்குவன அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
|