உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று;
பரிதி: மெய் வாய் கண் மூக்குச் செவி உண்டு. உறுப்பினால் குறைவில்லை என்பது நன்றல்ல;
காலிங்கர்: கை கால் கண் மூக்குச் செவி முதலிய உறுப்பு ஒத்தல் மக்கள் ஆதற்கு ஒப்பு அன்று;
பரிமேலழகர்: செறியத்தகாத உடம்பால் ஒத்தல் ஒருவனுக்கு நன்மக்களோடு ஒப்பாகாமையின் அது பொருந்துவதன்று;
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலார் 'அங்கம்' என்றமையின், 'உறுப்பு' என்றார். ஒருவனுக்கு நன்மக்களோடு பெறப்படும் ஒப்பாவது, உயிரின் வேறாய் நிலையுதல் இல்லா உடம்பு ஒத்தல் அன்று.
'மக்கள் ஒப்பாவது உறுப்பு ஒத்தலன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகமொப்பு ஒருகுடி மக்கள் ஒப்பாகாது', 'உடலுறுப்புகளால் ஒத்தல் மக்கள் ஒப்பாகாது', 'நல்ல குடியிற் பிறந்த மக்கள் (அந்த நல்ல குடியிற் பிறந்தவர்கள் என்பதற்கு அடையாளம்) தம்முடைய தாய் தந்தையர் அல்லது முன்னோர்களுடைய உருவம், நிறம், அங்கங்கள் முதலியவற்றில் ஒத்திருத்தல் சரியான ஒப்பல்ல', 'மனிதர்கள் ஒத்திருப்பதென்பது உறுப்பால் ஒத்திருப்பதன்று' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உறுப்புக்களால் ஒத்திருப்பது மக்கள் ஒப்புஆகாது என்பது இப்பகுதியின் பொருள்.
வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: செறியத்தக்க குணங்களை ஒத்தல்; அதனை ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [செறியத்தக்க- நெருங்கத்தக்க]
பரிப்பெருமாள் குறிப்புரை: செறியத்தக்க குணங்கள் உள ஆதலின் செறியத்தக்க குணம் என்றார். பண்பு இல்லாதார் மக்களல்லர் என்றது.
பரிதி: மக்கட் பண்பு உள்ளதே நன்று என்றவாறு.
காலிங்கர்: மற்று யாதோ ஒப்பு எனின் ஒருவர்க்குப் பெருமை பொருள் எனத்தக்க பண்பு ஒத்தல்; யாது மற்று அது, அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு அன்றே; மற்று அதனைச் சிலரோடு சிலர் ஒப்பதே ஒப்பாவது என்றவாறு. [அகத்து உறுப்பாகிய நெறிக்குறிப்பு - அன்பு முதலிய அகத்துறுப்புக்கள்]
பரிமேலழகர்: இனிப் பொருந்துவதாய ஒப்பாவது செறியத்தக்க பண்பால் ஒத்தல்.
பரிமேலழகர் குறிப்புரை: வேறன்றி நிலையுதலுடைய பண்பு ஒத்தலாகலான், அப்பெற்றித்தாய அவர் பண்பினையுடையன் ஆக என்பதாம்.
'செறியத்தக்க குணங்களை ஒப்பதே ஒப்பாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நிறைந்த குணவொப்பு ஒப்பாகும்', 'செறியத்தக்க பண்பால் ஒத்தலே பொருந்திய ஒப்பாகும்', 'சரியான ஒப்பு எதுவென்றால் அம்முன்னோர்களிடம் நிறைந்திருந்த செல்வமாகிய 'பண்புடைமை' என்ற குணத்தில் ஒத்திருப்பதேயாகும்', 'நெருங்கி அளவளாவுதற்குரிய பண்பினால் ஒத்திருப்பதே ஒப்பாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நிறைந்த பண்பால் ஒத்திருத்தலே ஒப்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|