செல்லான் கிழவன் இருப்பின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின்;
பரிப்பெருமாள்: நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின்;
பரிதி: வயல்தலைக்குச் செல்லாமல் இருப்பின்;
காலிங்கர்: தன் நிலக் கிழத்தியைப் பயிர் முகத்துத் தான் சென்று பல நாளும் விழி ஓட்டிப்பாரானாகில்;
பரிமேலழகர்: அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார்.
'நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மடிந்திருப்பானாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நிலத்துக்குரிய உழவன் நாள்தோறும் சென்று பார்த்து உரியதைச் செய்யாமல் சோம்பி இருந்தால்', 'நிலத்துக்கு உடையவன் (நிலவளத்தை கவனித்துப் பயிரைப் பாதுகாக்க அடிக்கடி) நிலத்துக்குப் போகாமல் இருந்து விட்டால்', 'நிலத்திற்குரியவன் நிலத்தை உரிய காலங்களில் சென்று நோக்காது இருப்பின்', 'நிலத்திற்குரியவன், நிலத்திற்குச் சென்று பாராமல் இருப்பானானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நிலத்திற்குரியவன் உரிய காலங்களில் சென்று நிலத்தை பாராது இருப்பானானால் என்பது இப்பகுதியின் பொருள்.
நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். [புலந்த-ஊடிய]
மணக்குடவர் குறிப்புரை: இது நாடோறுஞ்சென்று பார்க்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாள்தோறும் சென்று பார்க்க வேண்டும் என்பதூஉம் பாராக்கால் பயன் குன்றும் என்பதூஉம் கூறிற்று. இவை மூன்றினானும் உழும் திறன் கூறிற்று.
பரிதி: வயல் என்னும் பெண் வாடும், குலமகள் தன் கணவனைக் காணாமல் வாடுமாப் போல என்றவாறு.
காலிங்கர் ('நிலமடந்தை புல்லாள் புரளவிடும்' பாடம்): அந்நிலமடந்தை அவனை என்றும் மேவாளாகித் தனக்கு அலங்காரமாகிய பயிர்க்கோலம் அழிந்து தன்னோடு பொருந்தி வாழாளாகிப் புலந்து இவன் வாழ்க்கையைப் புரள விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: 'நிலம் புலந்து இல்லாளை ஊடி விடும் என்பாரும் உளர்; கற்புடை மகளிரை ஊடி விடும் என்பது பொருள் அல்ல. கிழவன் என்றது அந்நிலத்துக்கு உரியன் என்றது.
பரிமேலழகர்: அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது. [அவன் போகம் இழத்தல் நோக்கி- அந்நிலத்திற்குரியவன் அந்நிலத்தின் போகத்தை (விளைவாகிய பயனை) இழத்தலைக் கருதியாம்; அது-உழவு.
'அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நிலமகள் அவன் மனைவியைப் போல வெறுத்துப் பின் பிணங்குவாள்', 'அந்த நிலம் மனத்தாபமடைந்து மனைவியைப்போல (உணவளிக்க) பிணங்கிவிடும்', 'அது மனைவிபோல் அவனோடு பிணங்கிப் பயன்தராதுபோம்', 'அஃது அவன் மனைவி போலத் தன்னுள்ளே வெறுத்துப் பின் அவனோடு ஊடிவிடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அது மனைவிபோலப் பிணங்கி வாடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|