இன்பம் ஒருவற்கு இரத்தல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஒருவர்க்' பாடம்): இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்;
பரிப்பெருமாள்: இரத்தல் ஒருவற்கு இன்பமாம்;
பரிதி: தேகி என்பார்க்கு மகிழ்ச்சி எய்தும்; [தேகி- கொடு]
காலிங்கர்: பின் எஞ்ஞான்றும் இரப்பு என்னும் துன்பம் உறாராயின், ஒருவர்பால் சென்று ஒருவர் இரத்தல் பெரிதும் துன்பம் அன்றே; அதுவும் ஒருவர்க்கு இன்பம் தரும்;
பரிமேலழகர்: ஒருவற்கு இரத்தல்தானும் இன்பத்திற்கு ஏதுவாம்;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பம் - ஆகுபெயர். [இன்பம் என்பது இன்பத்திற்கு ஏதுவை யுணர்த்துதலால் காரியவாகு பெயர்]
'இரத்தல் ஒருவர்க்கு இன்பமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உதவி கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும்', 'ஒருவர்க்குப் பிச்சை வாங்குதலும் இன்பத்திற்குரிய செயலாகும்', 'பிச்சையெடுப்பதும் ஒருவனுக்கு இன்பமுண்டாக்கக் கூடியதுதான்', 'ஒருவனுக்கு இரத்தலும் இன்பமாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இரத்தலும் ஒருவர்க்கு மகிழ்ச்சியைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
இரந்தவை துன்பம் உறாஅ வரின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது வேண்டிய பொருள் பெறின் துன்பமாகா தென்றது.
பரிப்பெருமாள்: இரக்கப்பட்ட பொருள்கள் தாம் வருத்தமுறாதவகை எய்துமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பழிக்கப்படாதாயினும் துன்பமாகுமே என்றார்க்கு வேண்டின பொருள் பெறின் துன்பமாகாது என்று கூறப்பட்டது. இவை மூன்றினானும் இரவு தீது என்பாரை மறுத்தவாறாயிற்று.
பரிதி: தாதாவிடத்திலே தயவுண்டாகில் என்றவாறு. [தாதா-கொடையாளி]
காலிங்கர் ('இரந்தவர்' பாடம்): எப்பொழுது எனில் அங்ஙனம் ஒருவர்மாட்டு இரந்தவர் பின்பு எஞ்ஞான்றும் ஒரு வறுமைத்துயர் உறாவாறு வாய்ப்பப் பெற்று வருவாராயின் என்றவாறு.
பரிமேலழகர்: இரந்த பொருள்கள் ஈவாரது உணர்வு உடைமையால் தான் துன்புறாமல் வருமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'உறாமல்' என்பது கடைக்குறைந்து நின்றது. துன்பம் - சாதியொருமைப் பெயர். அவையாவன, ஈவார்கண் காலமும் இடனும் அறிந்து சேறலும், அவர் குறிப்பறிதலும், அவரைத் தம் வயத்தராக்கலும், அவர் மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான் வருவனவும், மறுத்துழி வருவனவும் ஆம். அவையுறாமல் வருதலாவது, அவர் முன்னுணர்ந்து ஈயக்கோடல். 'இரந்தவர் துன்பமுறாவரின்' என்று பாடம் ஓதி, 'இரக்கப்பட்டவர் பொருளின்மை முதலியவற்றால் துன்புறாது எதிர்வந்து ஈவராயின்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் நல்குரவான் உயிர் நீங்கும் எல்லைக்கண் இளிவில்லா இரவு விலக்கப்படாது என்பது கூறப்பட்டது. [உறாமல் என்பது உறாஅ எனக் கடைக் குறைந்து நின்றது; துன்பம்- துன்பங்களை உணர்த்துதலின் ஈறு தோன்றாத சாதி ஒருமைப் பெயர்; அவை - துன்பங்கள்]
'இரக்கப்பட்ட பொருள்கள் தான் வருத்தமுறாதவகை எய்துமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின்', 'பிச்சைப் பொருள்கள் ஈவார்க்கும் இரப்பார்க்கும் துன்பம் செய்யாமல் கிடைக்குமானால்', 'பிச்சை கேட்ட பொருட்கள் (கொடுப்பவருக்கோ வாங்குகிறவனுக்கோ) வருத்தமுண்டாகாமல் கிடைக்குமானால். (ஆனால் அப்படிக் கிடைப்பதில்லை)', 'இரந்த பொருள்கள் தான் துன்பம் அடையாமல் கிடைக்குமானால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இரந்த பொருள்கள் கடினமின்றிக் கிடைக்குமானால் என்பது இப்பகுதியின் பொருள்.
|