கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும்;
பரிப்பெருமாள்: கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார் முன்பே நின்று, இரத்தலும்;
பரிதி: நாஸ்தி என்னும் சொல் அறியாதார் உலகம் செய்யும் முறைமை அறிவாரிடத்திலே தேகி என்பதும்;
காலிங்கர்: இரவலர்க்கு என்றும் இலரென்பர் இலருமாய் நெஞ்சினால் ஈதல் கடப்பாட்டின் பயனும் அறிவார் யாவர்; மற்று அவர் முன் நின்று பிறர் ஒன்று இரக்கும் இரப்புத்தானும்;
பரிமேலழகர்: கரத்தல் இல்லாத நெஞ்சினையுடைய மானம் அறிவார் முன்னர் நின்று அவர் மாட்டு ஒன்று இரத்தலும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு' (குறள்-963) என்றதனால், அவர்க்கு அது கடன் எனப்பட்டது. அதனை அறிதல், சொல்லுதலுற்று உரைக்கலாகாமைக்கு ஏதுவாய அதன் இயல்பினை அறிதல். [அவர்க்கு -கரப்பில்லா நெஞ்சத்தார்க்கு; அது -மானமறிதல்; அதன் இயல்பினை - மானத்தின் தன்மையை.]
'கரப்பிலாத நெஞ்சினை யுடைய ஒப்புரவறிவார்/உலகம் செய்யும் முறைமை அறிவாரிடத்திலே/ ஈதல் கடப்பாட்டின் பயனும் அறிவார்/மானம் அறிவார் முன்பே நின்று இரத்தலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிக்காத மனமும் கடமையுணர்ச்சியும் உடையவர் முன்நின்று இரத்தலும்', 'பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்னாத மனத்தோடு கொடையைக் கடமையாகக் கொண்டு ஒழுகுவார் முன்னே நின்று இரத்தலும்', 'கபடமற்ற மனமுடையவராக (ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டியது) தம் கடமை என்பதை அறிந்தவர்களுக்கு முன் நின்று பிச்சை கேட்பது', 'ஒளித்தல் இல்லாத நெஞ்சினையுடைய கடமையை அறிவார் முன்னால் நின்று இரத்தலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஒளிக்காத உள்ளமுடைய ஒப்புரவறிவார் முன்னால்நின்று இரத்தலும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஓர் ஏர் உடைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஓரழகுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒப்புரவறிவார் மாட்டு இரத்தலா மென்றது.
பரிப்பெருமாள்: ஓரழகுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஏர்=யாமும் இவ்வாறு செய்யவேண்டும் என்று கருதுதல். இஃது ஒப்புரவறிவார்மாட்டு இரக்கலாம் என்றது.
பரிதி: பெருமை உடைத்து என்றவாறு.
காலிங்கர்: இங்கு ஓர் அழகு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: நல்கூர்ந்தார்க்கு ஓர் அழகு உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவ்வறிவுடையார்க்கு முன்நிற்றல் மாத்திரமே அமைதலின், 'முன் நின்று' என்றும், சொல்லுதலான் வரும் சிறுமை எய்தாமையின், 'ஓர் ஏஎருடைத்து' என்றும் கூறினார். உம்மை அதன் இழிபு விளக்கி நின்றது. [அவ்வறிவுடையார்க்கு - மானத்தின் இயல்பினை அறிதலுடையார்க்கு; இரப்பும் என்ற உம்மை அவ்விரத்தலின் இழிவை விளக்கி நின்றது]
'ஓர் அழகு உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஓர் அழகு', 'வறியவர்க்கு ஓர் அழகு தரும்', 'ஒரு அழகான காட்சிதான்', 'ஓர் அழகினை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
ஓர் எழுச்சி தருவதுவே என்பது இப்பகுதியின் பொருள்.
|