கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: இல்லை என்னாது மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல்வார்மாட்டும் ஒரு பொருளை இரந்து செல்லாமை;
பரிதி: ஈனக்குணம் பண்ணாமல் கொடுக்கிற தாதா வல்லாதாரிடத்திலே கேளாதிருப்பது; [ஈனக்குணம்-இழிந்த குணம்; தாதா-கொடையாளி]
காலிங்கர்: தாம் கருதிச் சென்றது ஒன்றைக் கரத்தல் இல்லாத செறிந்த அன்பினை உடையராகிய கண்போலும் கேளிர் மாட்டும் ஒன்று இரத்தல் என்பது பெரிதும் இளிவரவு அன்றே;
காலிங்கர் குறிப்புரை: அல்லது 'காவாதுவந்தீயும்' என்று பாடம் ஓதுவாரும் உளர்.
பரிமேலழகர்: தமக்கு உள்ளது கரவாது இவர் வரப்பெற்றேம் என்று உள்மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தார் மாட்டும் இரவாதே ஒருவன் வறுமை கூர்தல்; [கரவாது-ஒளிக்காமல்; உள்மகிழ்ந்து- மனம் உவந்து; வறுமை கூர்தல் - வறுமை அடைந்திருத்தல்]
நல்குரவு மறைக்கப்படாத நட்டார் மாட்டும் ஆகாது என்பதுபட நின்றமையின் உம்மை உயர்வுச் சிறப்பின்கண் வந்தது.
'இல்லை என்னாது மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் போல்வார்மாட்டும் ஒரு பொருளை இரந்து செல்லாமை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒளிக்காது மகிழ்ந்து கொடுக்கும் அன்பரிடத்தும் ஒன்றுபோய்க் கேளாமை', 'தம்மிடம் உள்ளதை மறைக்காமல் தாமே முன்வந்து மகிழ்ந்து கொடுக்கும் கண்போலச் சிறந்தவரிடத்தும் ஒன்றை வேண்டி இரவாதிருத்தல்', 'இல்லையென்னாமல் கொடுக்கக்கூடிய கண் போன்ற (மிகச் சிறந்த)வர்களிடத்திலும் போய், பிச்சை கேட்காமலிருப்பது', 'தம்மிடம் உள்ளதை ஒளியாது மகிழ்ந்து கொடுக்கும் கண் போல் சிறந்த நண்பரிடமும் இரவாமலிருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தம்மிடம் உள்ளதை மறைக்காமல் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடமும் ஒருபொருளைக் கேளாமை என்பது இப்பகுதியின் பொருள்.
கோடி உறும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி உடைத்து என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது, ஈவார் மாட்டும் இரக்கல் ஆகாது என்றது.
பரிதி: கோடி தனம் பெறும் என்றவாறு.
காலிங்கர்: அதனால் அது செய்யாமை தானே கொடி பொருளினைப் பெறும் என்றவாறு.
பரிமேலழகர்: இரந்து செல்வம் எய்தலின் கோடி மடங்கு நன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்விரவான் மானம் தீராது என்னும் துணையல்லது அதற்கு மிகுதி கூடாமையின், வல்லதோர் முயற்சியான் உயிரோம்பலே நல்லது என்பது கருத்து.
[அவ்விரவால் - அந்த இரத்தல் தொழிலால்; மிகுதி-மேம்பாடு]
'இரந்து பெற்ற பொருளினும் கோடி மடங்கு மிகுதி உடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கோடி நல்லது', 'இரந்து பொருள் பெறுதலைக் காட்டிலும் கோடி மடங்கு நல்லது', '(பிச்சை கேட்டு எவ்வளவு வாங்கினாலும் அதைவிடக்) கோடி மடங்கு நல்லது', 'கோடி மடங்கு நல்லது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கோடி மடங்கு நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.
|