கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ.
பரிப்பெருமாள்: உடையராய் வைத்து அவர் சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்லி ஈயாதார்க்கு உயிர் எவ்விடத்து ஒழித்து நிற்கின்றதோ.
பரிதி: நாஸ்தி என்பார்க்கு எப்படியோ தெரியாது; [நாஸ்தி என்பார் - 'இல்லை' என்பார்]
காலிங்கர்: அவர்போல் அன்றித்தாம் கைப்பொருள் உடையர் ஆகியும் கரப்பவராகிய கடுவினையாளர்க்கு அவருயிர் அவரதுடலில் யாங்குக் கரந்து நிற்குமோதான்; இது அறிகின்றிலோம். இது சால வியப்புடைத்து; .
பரிமேலழகர்: இனிச் சொல்லாடுகின்ற அவர்தமக்கு உயிர் பின்னும் நிற்றலான், அப்பொழுது எப்புரையுள் புக்கொளிந்து நிற்கும்? [அப்பொழுது- இரப்பார்க்குக் கரப்பார் பொருளில்லை என்று கூறிய அக்காலத்தில்; எப்புரையுள் - எந்த உள்துளையுள்]
'தாம் கைப்பொருள் உடையர் ஆகியும் கரப்பவராகிய கடுவினையாளர்க்கு அவருயிர் அவரதுடலில் யாங்குக் கரந்து நிற்குமோதான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மறைப்பவருக்குப் போகாது எங்கிருக்கும்?', 'பொருளை மறைத்து வைப்பார் நிலைக்கு அஞ்சி எங்குச் சென்று மறைந்து கொண்டிருக்குமோ?', '(வைத்துக் கொண்டே) இல்லையென்கிறவர்களுடைய உயிர் எங்கே ஓடி ஒளித்துக் கொள்ளுகிறதோ தெரியவில்லை', 'அங்ஙனமாயின் இல்லை யென்று சொல்லுகின்ற உள்ளது ஒளிப்பார்க்கு உயிர் எங்குச் சென்று மறையும்?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
உள்ளது மறைப்பார்க்கு உயிர் எங்குச் சென்று ஒளிந்திருக்கும்? என்பது இப்பகுதியின் பொருள்.
இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('இரப்பார்க்குச்' பாடம்): எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்குக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்:
மணக்குடவர் குறிப்புரை: இது பிணத்தை யொப்பரென்றது.
பரிப்பெருமாள்: எமக்கு யாதும் இல்லை, சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்கு அக்குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அளவிலே அவர் உயிர்போய்ப் பிணம்போல நிற்பார்கள்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிணத்தை யொப்பரென்றது.
பரிதி: இரப்பவர்க்குத் தேகி என்று கேட்க உயிர் விடும் என்றவாறு.
காலிங்கர்: எனவே இரப்பவர் உயர்குடி மரபினோர்க்கு அவ்விரவு என்னும் உரையாடவே உக்குவிடும் என்றவாறு. [உக்குவிடும் - பிளக்கும்]
பரிமேலழகர்: கரப்பார் இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது;
பரிமேலழகர்: உயிர் போகலாவது, 'இனி யாம் என் செய்தும்'? என்று ஏங்கிச் செயலற்று நிற்றல். 'அந்நிலையே, மாயானோ மாற்றி விடின்' (நாலடி-308) என்றார் பிறரும். 'கேட்டாரைக் கொல்லவற்றாய சொல், சொல்வாரைக் கோறல் சொல்லவேண்டாவாயினும் அது காண்கின்றிலம், இஃது என்னோ' என்பதாம். 'வறுமையுற்றுழி மறையாது இரக்கப்படுவாராய கேளிர்கட்கும் அதனைச் சொல்லாட உயிர் போம், ஆனபின், மறைக்கப்படுவாராய பிறர்க்குச் சொல்லாடியக்கால் போகாது எங்கே ஒளிந்துநிற்கும்? இரண்டானும் போமேயன்றோ'? என இரவஞ்சினான் ஒருவன் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அவ்விரவின் குற்றமும் கரவின் குற்றமும் ஒருங்கு கூறப்பட்டன. [உயிர் போகலாவது - இரப்பவர்க்கு உயிர் போதலாவது; யாம் என் செய்தும்- நாம் என்ன செய்வோம்; அது காண்கின்றிலம் - சொல்வாரைக் கொல்லுதலை நாம் காணவில்லை]
'இல்லை என்று சொல்லாடிய துணையானே இரப்பார்க்கு உயிர் போகாநின்றது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கேட்பவருக்கு கேட்டளவில் போகும் உயிர்', 'இரப்பவர் பிறரிடம் இல்லை என்று இரந்து சொல்லிய அளவிலே போகின்ற உயிர்', 'பிச்சை கேட்கிறவர்கள் தங்களுடைய துன்பங்களைச் சொல்லிக் கொள்ளப் போகிறபோது', 'உள்ளது ஒளிப்பார் இல்லை என்று சொன்னவுடன் இரப்பவர் உயிர் போய்விடுகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இரப்பவருக்குக் கேட்டளவில் போகும் உயிர் என்பது இப்பகுதியின் பொருள்.
|