நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிப்பெருமாள்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிதி: நாயகினிடத்திலே இன்பத்தைவிட்டு நீங்கின் சுடவும் கூடியிருக்கின் குளிர்வும். இப்படி இருக்கிற காமத்தீயை;
காலிங்கர்: நெஞ்சே! உலகத்து தீயினது இலக்கணம் தன்னை வந்து அணுகின் சுடுதலும், அகலின் மெய்தண் என்றலும் செய்யும். அதுவல்லது இங்ஙனம்
சிறுது தன்னை அகலின் சுடுதலும் அணுகின் தண் என்றலும் செய்யும் இந்தத் தீ;
பரிமேலழகர்: (பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை;
'தன்னை அகன்றவிடத்துச்சுடும்; அணுகினவிடத்துச் குளிரும்: இத்தன்மையாகிய தீ' என்றபடி இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தன்னை நீங்கினாற் சுடும்; நெருங்கினால் குளிரும். இவ்வியல்புடைய தீயை', 'அகன்று போனால் சுடும்; நெருங்கினால் குளிரும்;
இத்தன்மை உடைய தீயை', 'நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கும்போது குளிர்ச்சியை அளிக்கக்கூடியதுமான நெருப்பை', 'இந்தப் பெண்ணைவிட்டு நீங்கினால்
எரிச்சலும், ஆனால், நெருங்கினால் குளிர்ச்சியும் உடைய அதிசயத் தீயை' என்றபடி உரை தந்தனர்.
தன்னை நீங்கினாற் சுடும், நெருங்கினால் குளிரும், இவ்வியல்புடைய நெருப்பை என்பது இப்பகுதியின் பொருள்.
இவள் யாண்டுப் பெற்றாள்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
மணக்குடவர் குறிப்புரை: இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிப்பெருமாள்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இரண்டாம் கூட்டத்துக் கூடலுற்ற தலைமகன் தலைமகள் கேட்பது பயனாகத் தனது வேட்கை தோன்றச் சொல்லியது. இது புணர்ச்சி
வேட்கையால் கூறுதலால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிதி: எவ்விடத்திலே பெற்றாளோ இவள் என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்துப் பெற்றனள் என்றவாறு.
பரிமேலழகர்: என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்.
பரிமேலழகர் குறிப்புரை: கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும்,
இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள்
தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.
இப்பகுதிக்கு 'எவ்விடத்துப் பெற்றாள் இவள்?' என்று பழைய ஆசிரியர்கள் உரை தந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இவள் எங்குப் பெற்றாள்?', 'அவள் எவ்வுலகத்திலே பெற்றாள்?', 'இவள் எங்கு அடைந்தாள்?', 'இவள் எங்கிருந்து பெற்றாள்?'
என்றபடி உரை கூறினர்.
எங்குப் பெற்றாள் இவள்? என்பது இப்பகுதியின் பொருள்.
|